mk stalin condolenses to periyasamy death
தூத்துக்குடி தெற்கு திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான என்.பெரியசாமி மறைவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவத்துள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி (78) கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருந்தார். இதையொட்டி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இன்று காலை என்.பெரியசாமி, சிகிச்சை பலனின்றி இறந்தார். இதை அறிந்ததும், திமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் மருத்துவமனைக்கு திரண்டனர்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் மருத்துவமனையில் அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
திமுக தலைவர் கருணாநிதி, எப்போதுமே என் பெரியசாமியை முரட்டு பக்தன் என்றே அழைப்பார். அவர் இரண்டு முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவர்.

திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த என்.பெரியசாமி, மக்களின் செல்வாக்கை பெற்றவர். அவரது மறைவு, கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மறைவையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு திமுக அமைப்புகள் அனைத்தும் கட்சி கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறும், கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
