மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கைது...!
திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை போலீசார் இன்று கைது செய்தனர். அச்சிறுபாக்கம் அருகே நடந்த போராட்டத்தின்போது அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. போலீசாரின் துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். புதுச்சேரியிலும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் திமுக நிர்வாகி ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, மதுராந்தகம் அருகே, அச்சிறுபாக்கத்தில் நடைபெறும் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான திமுகவினர் மற்றும் எதிர்கட்சிகள் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டதால், அவர்களைக் கட்டுப்படுவத்துவதில் போலீசார் திணறி வருகின்றனர். வாகனங்களைக்கூட நகர்த்த முடியாத நிலையில் போலீசார் திணறி வருகின்றனர். இந்த நிலையில், மு.க.ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். மேலும் ஏராளமான திமுகவினரையும் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து திமுகவினர் வந்தவண்ணம் உள்ளதால், போலீசார் திணறி வருகின்றனர். ஸ்டாலின் கைது செய்யப்பட்ட ஏற்றப்பட்ட வாகனம், தொடர்ந்து அதே இடத்தில் நின்று கொண்டிருக்கிறது.