அமைச்சர்களைச் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் - தலைமைச் செயலகத்தில் பரபரப்பு
தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையில் மாண்புமிகுக்களை விட இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்களே கெத்து காட்டி வருகின்றனர். இவர்களின் கைகளில் தான் அதிமுக அரசின் எதிர்காலம் உள்ளது.
சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல எடப்பாடி அணியில் இருந்து ஓ.பி.எஸ்.அணிக்கு சென்ற எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை தற்போது 12 ஆக உள்ளது. சொல்லி வைத்தாற் போல சில பல எம்.எல்.ஏ.க்கள் மனம் மாறினாலும் கூட அதிமுக அரசு கவிழ்ந்துவிடும்.
எம்.எல்.ஏ.க்கள் அணி தாவுவதை தடுக்க அதிமுக அரசு ரொம்பவே மெனக்கெட்டு வருகிறது. ரகசியக் கூட்டம் நடத்திய தலித் எம்.எல்.ஏ.க்கள் ஆகட்டும், தோப்பு வெங்கடாச்சலம் அணியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகட்டும் அனைவரையும் அரவணைத்தே செல்வது என்ற நிலைப்பாட்டை எடப்பாடி அரசு எடுத்துள்ளது.
இந்தச் சூழலில்தலைமைச் செயலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர்களை தனித்தனியாக சந்தித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரே நேரத்தில் 10க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கைகளில் கோரிக்கை மனுக்கள் சகிதமாகச் சென்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அப்போது கூவத்தூர் ரெசார்ட்டில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் குறித்தும் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களிடம் விரிவாகப் பேசினார்கள் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்