பென்டிரைவில் சிக்கிய தினகரன், கலங்கி நிற்கும் அமைச்சர் உதயகுமார்: தகதக ஜெட் நியூஸ்...
ஃபுல் மீல்ஸை வெச்சு வெளுத்துக் கட்டி அலுத்துப் போகும்போது கரகர மொறுமொறுவென கொஞ்சம் ராகி பக்கோடாவும், ஸ்பெஷல் இஞ்சி சாயாவும் உள்ளே தள்ளினால் செம்ம தெம்பாக இருக்கும். அடுத்த ரெண்டு மணி நேரத்துக்கு பசியே இல்லாமல் நெத்தியடியாக வேலை பார்க்கலாம்.
அது போல்தான் பாரா பாராவாக கட்டுரை வாசித்து களைப்பானவர்களுக்காக இந்த ஜெட் வேக செய்திகள். ஏஸியா நெட் - தமிழ் இணைய தளத்திலிருந்து வெகு பிரத்யேகமாக...
”அரசின் அன்றாட நிகழ்வுகளில் ஆளுநர் பங்கேற்கலாம் என கூறி தமிழக அமைச்சர்கள் ஆளுநரிடம் சரணடைந்துள்ளனர். தமிழகத்தில் பி.ஜே.பி.யின் பினாமி ஆட்சி நடக்கிறது.”
- புதுவை முதல்வர் நாராயணசாமி.
“வளர்ச்சிப் பணிகளில் மாநில அரசுக்கு ஒத்துழைக்கவே ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை. கட்டாயப்படுத்தியோ, வர்புறுத்தியோ எந்த அரசு அதிகாரியையும் கூட்டத்திற்கு அழைக்கவில்லை. சட்டப்படியே நடந்துள்ளேன்.”
- தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்.
”நான் பேசுவது மக்களுக்குப் புரியும், ஆனால் தமிழக அமைச்சர்களுக்குப் புரியாது. ரேஷன் கடைகளில் உளுந்து கிடைக்காது என சொல்ல ஒரு அமைச்சரை வைத்திருக்கிறோம். அந்த அமைச்சர் உடலுக்கு தீங்கான மசூர் பருப்பை சாப்பிடுவாரா? மக்கள் மட்டும் சாப்பிட வேண்டுமா!”
- தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த்.
”நாங்கள் கோவிலாக கருதும் அம்மா அவர்களின் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது மிகவும் வேதனையான விஷயம்.”
- அமைச்சர் ஜெயக்குமார்.
“போயஸ் கார்டன் ரெய்டுக்கு காரணமானவர்களை அம்மாவின் ஆன்மா சும்மா விடாது.”
- அமைச்சர் செல்லூர் ராஜூ.
“தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழி சினிமாக்கள் தவிர இந்தியிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். 2019 வரை பிசியாக இருக்கிறேன்.”
- நடிகர் பிரகாஷ் ராஜ்.
“அம்மாவின் வீட்டில் நடந்த சோதனை எங்களை கலங்கடித்துவிட்டது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறையே சோதனையை நடத்தியுள்ளது.”
- அமைச்சர் உதயகுமார்.
“சசிகலா ஒரு ஊழல் இளவரசி. அவரது சொத்துக்கள் அத்தனையையும் பறிமுதல் செய்ய வேண்டும். மேலும் வருமானவரி சோதனையில் அரசியல் உள்நோக்கம் உள்ளது.”
- பா.ம.க. தலைவர் மருத்துவர் ராமதாஸ்.
“போயஸ்கார்டனில் கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் என் அலுவலகம் மற்றும் நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட போட்டோக்களைத்தான் வைத்திருந்தேன். எனவே ரெய்டில் பலமான ஆதாரம் சிக்கியுள்ளதாக கூறி அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கிறார்கள் சிலர்.”
- அ.தி.மு.க. து.பொ.செயலாளர் டி.டி.வி.தினகரன்.
மத்திய அரசின் வருமான வரித்துறை போயஸில் நடத்திய சோதனை மாநில அரசுக்கு தெரியாமல் இருக்காது. ஆனால் எங்களுக்கு எதுவுமே தெரியாது என இரு முதல்வர்களும் கூறுவது ஆச்சரியப்படுத்துகிறது.
- ச.ம.க. தலைவர் சரத்குமார்.