உங்க சொந்தக்காரங்க திமுகவில் இருக்கிறாங்களா ? அவங்களை வெறுத்து ஒதுக்குங்க… அமைச்சரின் அதிரடி அட்வைஸ் !!
உங்களது உறவினர்கள் திமுகவில் இருந்தால் அவர்களை வெறுத்து ஒதுக்குங்கள் என்றும் இடைத் தேர்தலுக்காக உங்கள் கிராமங்களில் உள்ள சுவர்களை இரட்டை இலை சின்னம் வரைய ரிசர்வ் பண்ணுங்கள் என்றும் அதிமுகவினருக்கு அமைச்சர் தங்கமணி அறிவுறுத்தியுள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் தங்கமணி, கே.சி.வீரமணி, சேவூர் ராமச்சந்திரன், நிலோஃபர் கபில் மற்றும் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் தங்கமணி, திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க டி.டி.வி.தினகரன் திட்டமிடட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். அதிமுக. ஆட்சியையும், கட்சியைக் கைப்பற்ற துரோகியும் எதிரியும் சேர்ந்துவிட்டனர் என்றும் , 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தி.மு.கவோடு தினகரன் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
லண்டனில் தினகரன் 1000 கோடி ரூபாய்க்கு ஹோட்டல் வாங்கினார். அந்நியச் செலாவணி மோசடியில் ஒன்றரை ஆண்டு சிறைக்குச் சென்றார் எனவும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.
திமுகவில் இருக்கும் உறவினர்களை வெறுத்து ஒதுக்கி வையுங்கள் என்றும், நமக்கு கட்சிதான் முக்கியம் உறவினர்கள் அல்ல என்றும் அமைச்சர் தங்கமணி தொண்டர்களுக்கு சீரியசாக அட்வைஸ் பண்ணினார்.
அதிமுக வெற்றிபெறப் பாடுபடுங்கள். சுவர்களில் மற்ற கட்சி சின்னங்களை விட இரட்டை இலை சின்னம் அதிகம் இருக்க வேண்டும். கிராமப்புறங்களில் இப்போதே சின்னம் வரைய நிறைய இடங்களைப் பிடித்துவையுங்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், வேட்பாளர் யார் என்று பார்க்காதீர்கள், சின்னத்தைப் மட்டும் பாருங்கள் என . அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.