போராட்டங்கள் எதிர்கட்சிகளால் தூண்டிவிடப்பட்டவையாம்.. - சொல்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு...
நீட் தேர்வு விலக்குகாக தமிழக அரசு தொடர்ந்து போராடி வந்தது எனவும் ஆனால் உச்சநீதிமன்றம் அனுமதி தர மறுத்துவிட்டது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் தந்தை சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்துவருகிறார். ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த அனிதா, ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார்.
இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.7. நீட் தேர்வு எழுதிய அனிதாவின் கட்-ஆஃப் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது.
இந்த நிலையில், மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால், மாணவி அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பல்வேறு தரப்பினரும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, நீட் தேர்வு விலக்குகாக தமிழக அரசு தொடர்ந்து போராடி வந்தது எனவும் ஆனால் உச்சநீதிமன்றம் அனுமதி தர மறுத்துவிட்டது என்றும் தெரிவித்தார்.
மேலும், தற்போது தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் அனைத்தும் எதிர்கட்சிகளால் தூண்டிவிடப்பட்டவை எனவும் அவர் தெரிவித்தார்.