Minister sellur raju aviod press meet
சசிகலா, அதிமுக உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளில் தாம் கூறும் கருத்துக்கள் தொடர்ந்து சர்ச்சையாகி வருவதால் அமைச்சர் செல்லூர் ராஜு தற்போது செய்தியாளர்களை பார்த்தாலே ஓடி ஒளியத் தொடங்கியுள்ளார்..
வைகை அணையில் நீர் ஆவியாவதைத் தடுக்க தண்ணீரின் மேற்பரப்பில் தெர்மாகோல் வைத்த விவகாரத்தில் சிக்கி நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டு வருபவர் அமைச்சர் செல்லூர் ராஜூ. அந்த சம்பவத்திற்கு பின் சமூக வலைத்தளங்களில் அவரைப் பற்றிய மீம்ஸ்கள் ஏராளமாக வலம் வருகிறது.
இதே போன்று அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை நாங்கள் யாரும் பார்க்கவில்லை என்றும் அவர் இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் என தாங்கள் கூறியதெல்லாம் பொய் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூற, நாங்கள் அனைவரும் ஜெயலலிதாவைப் பார்த்தோம் என அதரடியாக பேட்டி கொடுத்தார் செல்லூர் ராஜூ.
அதன்பின் இந்த ஆட்சி அமைய காரணமே சசிகலாதான். ஆனால், சூழ்நிலை காரணமாக அமைதியாக இருக்கிறேன் எனக் கூறி எடப்பாடி அணிக்கு கோபத்தை உண்டாக்கினார். இந்த சர்ச்சைக்குரிய கருத்தால், தினகரன் கூறிய ஸ்லீப்பர் செல் அவர்தான் என சந்தேகம் எழுந்தது. ஆனால், நான் ஸ்லீப்பர் செல் இல்லை என செல்லூர் ராஜு மறுப்பு தெரிவித்தார்.
அதேபோல், டெங்குவால் தமிழகத்தில் யாரும் இறக்கவில்லை என பேட்டியளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மேலும், மாட்டுச்சாணியை வீட்டின் முன்பு தெளித்தால் டெங்கு போன்ற நோய்கள் ஏற்படாது எனக்கூறி தமிழகத்தையே சிரிக்க வைத்தார்.
மழைக்காலம் என்று வந்தால் டெங்கு உள்ளிட்ட காற்ச்சல்கள் வருவது சகஜம்தாள் என்று நேற்று செல்லூர் ராஜு பேட்டியளிக்க அதுவும் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
இவரின் அனைத்து பேட்டிகளும் சர்ச்சைகளுக்கும், கேலிக்கும் உள்ளானதால், கோபமடைந்த முதமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் செல்லூர் ராஜூவை அழைத்து டோஸ் விட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, மதுரையில் ஒரு விழாவில் கலந்துகொள்ள வந்த அவரை பேட்டியெடுக்க செய்தியாளர்கள் குவிந்தனர். ஆனால், யாருக்கும் பேட்டியளிக்கப் போவதில்லை என செல்லூர் ராஜு தப்பித்தோம் பிழைத்தோம் என அங்கிருந்து ஓட்டம் எடுத்தார்.
