தமிழகத்தில் இரண்டாம் இடத்திற்காக பாஜகவுடன் அதிமுக மோதல்..! வருத்தப்பட்ட திமுக அமைச்சர்
தமிழகத்தில் யார் எதிர்க்கட்சியாக செயல்படுவது என்ற போட்டி அதிமுக-பாஜக இடையே ஏற்பட்டுள்ள நிலையில், இரண்டாம் இடத்திற்காக அதிமுக போட்டியிடுவது வேதனை அளிப்பதாக அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார்
தமிழகத்தில் யார் எதிர்க்கட்சி
2011ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த அதிமுக கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை இழந்தது.இதனையடுத்து திமுக ஆட்சி அமைந்து ஒரு வருடம் ஆகி இருக்கும் நிலையில் யார் தமிழகத்தில் எதிர்கட்சி என்ற போட்டி அதிமுக-பாஜக இடையே ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு புகார்களையும், குற்றச்சாட்டுகளையும் பாஜக கூறி விமர்சித்து வருகிறது. ஆனால் பெரிய அளவிலான எதிர்ப்பைக் காட்டாமல் அதிமுக சாதாரணமாகவே செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறுகையில் 67 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு அதிமுக எதிர்க்கட்சியாக உரியமுறையில் செயல்படவில்லை என்றும் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட பாஜக தமிழகத்தில் எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். தமிழகத்தில் தாங்கள்தான் எதிர்க்கட்சி என்றும் அதிமுகவினர் கூறி வருகின்றனர்.
இரண்டாம் இடத்திற்கு அதிமுக போட்டி
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் சாமிநாதன், செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது தமிழகத்தில் திமுகதான் எப்போதும் முதலிடம் என்பதை அதிமுக-பாஜக ஒப்புக் கொண்டதற்கு நன்றி என தெரிவித்தார். மேலும் இரண்டாம் இடத்திற்கு பாஜக அதிமுக மோதிக்கொண்டு இருப்பதாகவும் இரண்டாம் இடத்திற்கு பாஜகவுடன் அதிமுக போட்டியிடுவது வருத்தம் அளிப்பதாகவும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்