விலகி இருக்க சொன்னால் ஒன்றிணைய அழைக்கிறார்... ஸ்டாலினை நோஸ் கட் செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!
கொரோனா வைரஸ் காரணமாக பிரதமர் மோடி உட்பட அனைத்து வல்லரசு நாடுகளும் விலகி இருப்போம் என கூறி வரும் நிலையில், ஸ்டாலின் மட்டும் ஒன்றிணைவோம் வா என அனைவரையும் அழைத்து அரசியல் செய்து வருகிறார்.
அனைவரும் விலகி இருப்போம் என கூறும் நிலையில் மு.க.ஸ்டாலின் மட்டும் 'ஒன்றிணைவோம் வா' என அரசியல் செய்கிறார் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய பின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளருக்கு பேட்டியளிக்கையில்;- விருதுநகர் மாவட்டத்தில் 16 பேர் மட்டுமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக முதல்வர் உத்தரவுப்படி ஏழை எளிய மக்களுக்கு அதிமுகவினர் உதவி செய்து வருகின்றனர்.
அனைத்து அர்ச்சகர்களும் வசதியாக இருப்பவர்கள் கிடையாது. ஏழை எளிய அர்ச்சகர்களும் இருப்பார்கள் அவர்களுக்கு உதவி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக பிரதமர் மோடி உட்பட அனைத்து வல்லரசு நாடுகளும் விலகி இருப்போம் என கூறி வரும் நிலையில், ஸ்டாலின் மட்டும் ஒன்றிணைவோம் வா என அனைவரையும் அழைத்து அரசியல் செய்து வருகிறார்.
மு.க.ஸ்டாலின் அவர்கள் உண்மையான குறைகளை சுட்டிக் காட்டலாம். ஆனால், அவர்கள் நிறையை ஏதும் கூறாமல் குறைகளை மட்டுமே தேடித் தேடிக் கொண்டு குறை கூறி வருகிறார். ஸ்டாலின் பேச்சை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. கோயில் குறித்த ஜோதிகா தெரிவித்த கருத்து பற்றி தெரிவித்த அவர், இறைவனை நினைப்பவர்களுக்கு மட்டும் தான் ஏழைகளுக்கு உதவ வேண்டுமென்ற எண்ணம் வரும், இறைவன் இல்லை என்று சொல்லும் நாத்திகர்களுக்கு பிறருக்கு உதவும் எண்ணம் வராது. இதுபோன்ற கருத்துக்கள் தற்போது தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.