கடந்த 5ம் தேதி முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர், அதிமுக பொது செயலாளர் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இதற்கிடையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதையடுத்து அனைத்து எம்எல்ஏக்களையும் சொகுசு பஸ்களில் ஏற்றி கொண்டு சென்றனர்.
அவர்களை காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோல்டன் பே எனப்படும் தனியார் விடுதியில் அடைக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
இந்நிலையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், மக்களின் கருத்தை கேட்டு நல்ல முடிவை எடுப்பேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-
'தொகுதி மக்களின் கருத்துகளை கேட்டு நல்ல முடிவு எடுப்பேன். ஜெயலலிதாவின் பெருமையையும், கொள்கைகளையும் நிலைநிறுத்தும் வகையிலும், அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்கும் வகையிலும், நல்ல முடிவு எடுப்பேன்.‘
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
