பால் மற்றும் பேருந்து கட்டணம் உயர்கிறதா? அமைச்சர் நேரு சொன்ன அதிர்ச்சி தகவல்
திமுக அரசு பொறுப்பேற்றவுடன் பால் விலை குறைப்பு மற்றும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் என்ற அறிவிப்பை நடைமுறைபடுத்தியது. இந்த நிலையில் பால் மற்றும் பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பால் பொருட்கள் விலை உயர்வு
குழந்தைகள் முதல் பெரியவர்கள் முதல் அனைவருக்கும் இன்றியமையாத பொருளாக இருப்பது பால், இதன் காரணமாகத்தான் திமுக தேர்தல் வாக்குறுதியாக ஆவின் பாலின் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிடப்பட்டது. இதனையடுத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும் இதற்கான ஆணையில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் ஸ்டாலின், அதன்படி ஆவின் பால் லிட்டருக்கு மூன்று ரூபாய் விலை குறைப்பு கடந்த ஆண்டு மே 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதனால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தங்களது மாத செலவில் குறைந்தது 500 ரூபாய் சேமிக்க முடிந்ததாக தெரிவித்தனர். இதே போலத்தான் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் என்ற அறிவிப்பை வெளியிட்டு அதனையும் செயல்படுத்தி காட்டினார். இந்தநிலையில் பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மார்ச் மாதம் முதல் நெய், தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட ஆவின் பால் பொருட்களின் விலை உயர்ந்தி தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, நெய், ஒரு லிட்டர் ரூ.515-ல் இருந்து ரூ.535 ஆகவும், அரை லிட்டர் தயிர் ரூ.27-ல் இருந்து ரூ.30 ஆகவும், 200 கிராம் பாதாம் பவுடர் ரூ.20 அதிகரித்து ரூ.100 ஆகவும் இதே போல ஐஸ்கிரிம் விலையையும் அதிகரித்து தமிழக அரசு உத்தரவு வெளியிட்டிருந்தது.
பால், பேருந்து கட்டணம் உயர்வா?
இதற்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். பால் விலையை குறைத்து விட்டு பால் பொருட்களின் விலையை அதிகரித்தாகவும் தெரிவித்திருந்தனர். அதாவது ஒரு கையில் கொடுத்து விட்டு மறு கையில் பிடுங்குவது போல் இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தனர். இந்தநிலையில் திருச்சியில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் நேரு ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு காலத்திலும் பொருளாதார ரீதியாக ஏற்றம் வரும் போது மக்கள் சந்திக்கும் வகையில் விலை ஏற்றம் இருக்கும் என கூறினார். மக்கள் மீது வேண்டும் என்றே திணிப்பது இல்லையென கூறினார். தனியார் கொள்முதல் செய்யும்போது விலை ஏற்றம் செய்ய வேண்டும் என கூறுகின்றனர். தங்களுக்கு விலை கட்டுபடியாகவில்லையெனவும் தெரிவிப்பதாக கூறினார். அதிகாரிகளும் சம்பளம் அதிகமாக வேண்டும் என கேட்கிறார்கள், அரசாங்கம் எவ்வளவு தான் மானியம் கொடுத்தாலும் ஒரு சிறிதளவாவது மாறுதல் வரும் என தெரிவித்தவர். இது தொடர்பான முதலமைச்சர் தான் முடிவெடுப்பார் என கூறினார். தற்போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் பால் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வெளியான தகவல் மக்களை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.