மழையால் சேதமான பள்ளி சான்றிதழ்கள்… புதுப்பித்து வழங்க நடவடிக்கை… அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் திட்டவட்டம்!!
கனமழை காரணமாக சேதமடைந்துள்ள மாணவர்களின் பள்ளி சான்றிதழ், வீட்டின் பத்திரங்கள் ஆகியவை விரைவில், புதுப்பித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக சேதமடைந்துள்ள மாணவர்களின் பள்ளி சான்றிதழ், வீட்டின் பத்திரங்கள் ஆகியவை விரைவில், புதுப்பித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்ட சேதங்களை பார்வையிட மத்திய அரசின் 6 பேர் கொண்ட மத்திய குழு நாளை மதியம் தமிழகம் வரவுள்ளதாகவும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் ராஜீவ் ஷர்மா தலைமையில், மொத்தம் 6 அலுவலர்கள் கொண்ட ஒன்றிய பல்துறை ஆய்வுக் குழு, தமிழ்நாட்டில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை பார்வையிட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்தக் குழுவானது நாளை சென்னை வந்தடைந்து, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலருடன் கலந்தாலோசிப்பதாக கூறிய அவர், இந்தக் குழு இரண்டு குழுக்களாக பிரிந்து, நவம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.
குழு 1ல் உறுப்பினர்கள் ராஜீவ் ஷர்மா, விஜய் ராஜ்மோகன், ரனன்ஜெய் சிங் ஆகியோர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார்கள் என்றும் இந்த குழுவை, வருவாய் நிர்வாக ஆணையர் பணிந்திர ரெட்டி ஒருங்கிணைப்பார் என்றும் குறிப்பிட்டுள்ள அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், குழு 2ல் உறுப்பினர்கள் ஆர்.பி.கவுல், ஆர்.தங்கமணி,பாவ்யா பாண்டே ஆகியோர் கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார்கள் என்றும் இந்த குழுவை பேரிடர் மேலாண்மை துறை அரசு முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் ஒருங்கிணைப்பார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஆய்வு முடிந்தவுடன் நவம்பர் 24 ஆம் தேதியன்று மத்திய குழுவினர், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை செய்வதாகவும் மத்திய அரசின் ஆய்வுக்கு பின்னர் தொடர்புடைய குழு அலுவலர்களிடம் கலந்து ஆலோசித்து தமிழகத்தில் ஏற்பட்ட மழை சேத பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் தெரிவித்தார்.
ஒன்றிய குழு வருகிறபோது, கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சியினரும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு மழைப்பாதிப்பு குறித்து தெரிவிக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தமிழகத்தில் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்னும் மழை பெய்து கொண்டு இருப்பதாகவும், மத்திய அரசிடம் நிவாரணம் பெற எவ்வளவு அழுத்தங்களைக் கொடுக்க முடியுமோ அவ்வளவு அழுத்தம் கொடுத்து தற்போது புதியதாக இருக்கும் வெள்ளச் சேத விவரங்களையும் சேர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் மூலமாக முடிந்த அளவுக்கு அதிக நிவாரணம் பெற நடவடிக்கை எடுப்போம் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். அதிகமாக எந்த இடங்களில் பாதிப்பு இருக்கிறது என்று பார்த்து அங்கு மத்திய குழு ஆய்வு மேற்கொள்வார்கள் என்றும் கனமழை காரணமாக மாணவர்கள் பள்ளி சான்றிதழ், வீட்டின் பத்திரங்கள் சேதமடைந்துள்ளதால் விரைவில், அதனை புதுப்பித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.