ஏழுமலையான் புண்ணியம்லாம் இருக்கட்டும்.. உங்களுக்கு ஓட்டு போட்டதுக்கு நீங்க என்ன பண்ணீங்க? கொந்தளிக்கும் மக்கள்..!
திருப்பதி ஏழுமலையான் புண்ணியத்தில் தமிழக மக்கள் குறை எதுவும் இல்லாமல் நன்றாக இருக்கிறார்கள் என அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
பிரச்னைகளின் மறு உருவாக தமிழகம் இருந்துவரும் நிலையில், எந்த பிரச்னையும் இல்லாமல் மக்கள் நன்றாக இருக்கிறார்கள் எனக்கூறி தப்பித்துக்கொள்வதற்கான முயற்சிதான் அமைச்சரின் பேச்சு.
டெங்குவால் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தொடரும் உயிரிழப்புகள், கந்துவட்டி கொடுமையால் நிகழும் உயிரிழப்புகள், தண்ணீர் பற்றாக்குறை, விவசாயிகள் பிரச்னை, வேலையில்லா திண்டாட்டம், மீனவர்கள் கைது என தமிழகம் முழுவதும் பல்வேறு பிரச்னைகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். (இவற்றையெல்லாம் பிரச்னைகள் என அமைச்சர் கருப்பண்ணன் கருத்தில்கூட கொள்ளவில்லை போலும்..)
இப்படிப்பட்ட நிலையில், மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வுகாண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அமைச்சர் கருப்பண்ணன், ஏழுமலையான் புண்ணியத்தில் மக்கள் நலமாக உள்ளனர் என கூறி தப்பித்துக்கொள்ள முயல்கிறார்.
ஏற்கனவே திருப்பூரில் நொய்யல் ஆறு நுரையாக ஓடியபோது, மக்கள் சோப்பு போட்டு குளித்ததால்தான் நுரை ஓடுகிறது என அலட்சியமாக கூறிய அமைச்சர் கருப்பண்ணன், தற்போது மக்களுக்கு எந்தவித பிரச்னைகளும் இல்லை எனவும் அனைவரும் நலமாக இருக்கிறார்கள் எனவும் கூறியிருக்கிறார்.
பல்வேறு பிரச்னைகளை சந்தித்துவரும் தமிழக மக்கள், எந்தவித பிரச்னையுமின்றி நலமாக இருக்கிறார்கள் என அமைச்சர் தெரிவித்திருப்பது மக்கள் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதுவும் ஏழுமலையான் புண்ணியத்தில் மக்கள் நலமாக இருக்கிறார்கள் என தெரிவித்திருக்கிறார். நாங்க உங்களுக்கு போட்டோமா? அல்லது ஏழுமலையானுக்கு ஓட்டு போட்டோமா? என மக்கள் ஆதங்கமாக கேள்வி எழுப்புகின்றனர். ஏழுமலையான் பாத்துக்குறது இருக்கட்டும்.. உங்களுக்கு ஓட்டு போட்டதுக்கு நீங்க பண்ணீங்க? எனவும் மக்கள் கொந்தளிக்கின்றனர்.