அவர் ஒன்றும் கட்சியின் பொது செயலாளரோ... ஒருங்கிணைப்பாளரோ இல்லை! அமைச்சர் கடம்பூர் ராஜு
கட்சியின் செய்தி தொடர்பாளர் என்பவர் தலைமையின் கருத்தைக் கேட்டு தெரிவிக்க வேண்டுமே தவிர தன்னிச்சையாக கருத்து தெரிவிக்க கூடாது என்றும் அவர் ஒன்றும் கட்சியின் பொதுச் செயலாளரோ, ஒருங்கிணைப்பாளரோ இல்லை என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார். கே.சி.பழனிசாமி நீக்கப்பட்டது
குறித்து அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் பதவியை பிடுங்கியதால் அவர் தர்மயுத்ததை தொடங்கினார். இதையடுத்து சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்லவும் எடப்பாடி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால்
அதிமுக தங்களுக்கே சொந்தம் எனவும் சசிகலாவால் நியமிக்கப்பட்ட நியமனங்கள் செல்லாது எனவும் ஒபிஎஸ் கூறிவந்தார். ஆனால் எடப்பாடி ஆட்சி தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. இதைதொடர்ந்து மோடி வற்புறுத்தலுக்கிணங்க இரு தலைவர்களும் ஒன்றாக இணைந்து கட்சியை செயல்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுகவை சேர்ந்த கே.சி பழனிச்சாமி ஆதரிப்போம் என தெரிவித்தார். இதனால் அவர் அதிமுகவில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இதுகுறித்து கே.சி.பழனிசாமி, சர்வாதிகார மனப்பான்மை உடன் ஓ.பி.எஸ்., இபிஎஸ் செயல்படுவதாகவும்
அதிமுகவில் இரட்டை தலைமையால் பல பிரச்சனைகள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து என்னை நீக்கியது செல்லாது எனவும் ஓபிஎஸ், இபிஎஸ் சேர்ந்து கட்சியை மோடியிடம் அடமானம் வைத்து விட்டார்கள் எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பேசும்போது, காவிரி மேலாண்மை விவகாரம் குறித்து ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஒருங்கிணைப்பு குழுவிடம் ஆலோசனை செய்யாமல் தன்னிச்சையாகக் கருத்து தெரிவித்ததால்தான் கே.சி.பழனிச்சாமி நீக்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளார்.
தூத்துக்குடியில், கூட்டுறவு தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தலைமையில் முதன்முதலாக கூட்டுறவுத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். இந்த தேர்தலில் எதிரிகளும் துரோகிகளும்
களத்தில் இறங்க உள்ளனர். இதில், துரோகிகள் எதிர்கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடலாம். இதில் புதிய தேர்தல் வியூகம் அமைத்து ஒற்றுமையாக செயல்பட்டு பதவிகளைக் கைப்பற்ற வேண்டும் என்றார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு கட்சியின் செய்தி தொடர்பாளர் என்பவர், அந்தக் கட்சியின் தலைமையின் கருத்தை கேட்டு தெரிவிக்க வேண்டுமே தவிர தன்னிச்சை கருத்து தெரிவிக்க கூடாது. தன்னிச்சையாக கருத்து தெரிவிக்க, கே.சி.பழனிச்சாமி ஓன்றும் கட்சியின் பொதுச்செயலாளரோ
ஒருங்கிணைப்பாளரோ அல்ல என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.