பொதுக்குழுவை எதிர்க்க தினகரனுக்கு அதிகாரமில்லை - பதிலடி கொடுக்கும் ஜெயக்குமார்...!
பொதுக்குழுவை எதிர்ப்பதற்கு டிடிவி தினகரனுக்கு அதிகாரமில்லை எனவும், மூன்றில் ஒரு பங்கு பொதுக்குழு நிர்வாகிகளின் ஆதரவோடு பொதுக்குழு கூட்டப்படுகிறது எனவும் டிடிவி தினகரனின் அறிக்கைக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.
இதனால் அந்த 19 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி தமிழக அரசின் கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில், ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏஎக்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.பி., எம்எல்ஏக்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் சசிகலா தினகரனை நீக்குவது குறித்து விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என எடப்பாடி தெரிவித்தார்.
இதைதொடர்ந்து எடப்பாடிக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை எனவும், செப்.12-ல் அதிமுக பொதுக்குழு கூடும் என்று எடப்பாடி அறிவித்திருப்பது சட்டவிரோதம் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், செய்தியாளருக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், பொதுக்குழுவை எதிர்ப்பதற்கு டிடிவி தினகரனுக்கு அதிகாரமில்லை எனவும், மூன்றில் ஒரு பங்கு பொதுக்குழு நிர்வாகிகளின் ஆதரவோடு பொதுக்குழு கூட்டப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
மேலும், அதிமுகவில் 100 சதவிகித ஒப்புதலோடு பணிகள் நடைபெறுவதாகவும், ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டவர் டிடிவி தினகரன் கட்சியில் உரிமை கொண்டாடகூடாது எனவும் குறிப்பிட்டார்.