minister jayakumar explanation about fishermen rescue job
ஓகி புயலால் கடலுக்குள் சிக்கிய மீனவர்களில், 2805 மீனவர்கள் வெவ்வேறு மாநிலங்களில் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஓகி புயலால் கடலில் மாயமான குமரி மாவட்ட மீனவர்களை உடனடியாக மீட்டுத்தர கோரி சென்னை சேப்பாக்கம், குமரி மாவட்டம் குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கரையிலிருந்து 150 நாட்டிகல் மைல் தொலைவில் தங்கு கடல் பகுதியில் 20 முதல் 40 நாட்கள் தங்கி குமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிப்பர். ஓகி புயல் காரணமாக மீனவர்கள் திசைமாறி கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் லட்சத்தீவு பகுதியிலும் கரை ஒதுங்கியுள்ளனர்.
வெளி மாநிலங்களில் தஞ்சமடைந்துள்ள மீனவர்களை மீட்டு கொண்டுவர அந்தந்த மொழி தெரிந்த, தமிழகத்தின் ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு வெளி மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த குழு, வெளிமாநிலங்களில் தஞ்சமடைந்துள்ள மீனவர்கள் மற்றும் படகுகளின் எண்ணிக்கை குறித்த தகவல்களை அளித்துள்ளது.
அந்த தகவலின்படி, கேரளாவில் 152 மீனவர்களும் கர்நாடகாவில் 975 மீனவர்களும் மகாராஷ்டிராவில் 836 மீனவர்களும் மேலும் குஜராத், லட்சத்தீவு என மொத்தமாக 2805 மீனவர்கள் வெளிமாநிலங்களில் பாதுகாப்பாக உள்ளனர். 301 மீன்பிடிபடகுகளும் 62 சிறிய படகுகளும் பாதுகாப்பாக உள்ளன.
மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மீட்டுகொண்டுவர இலவச டீசல் வழங்கும் பணி நடைபெற்றுவருகிறது. மீனவர்களின் உணவு செலவுக்காக 2000 ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
குமரி மாவட்டத்தில் பாதிப்பு குறித்து முழுமையாக கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். பொதுவாக தமிழக மீனவர்கள் 200 நாட்டிகல் மைல்களுக்கு அப்பால் சென்று மீன் பிடிப்பர். அதனால், 200 நாட்டிகல் மைல்களுக்கு அப்பாலும் மீனவர்களைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
