ஆதாரம் இருந்தால் கேஸ் போடுங்க.. ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் சவால்
அதிமுக ஆட்சியை கமிஷன் ஆட்சி என விமர்சிப்பதை விடுத்து ஆதாரம் இருந்தால் ஸ்டாலின் நீதிமன்றத்தில் வழக்கு தொடரட்டும் என அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அதிமுக ஆட்சியை கமிஷன் ஆட்சி என விமர்சிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், குற்ற மனப்பான்மை கொண்டவர்களுக்கே கமிஷன் நினைவுக்கு வரும். லஞ்சம், ஊழல் என்ற சொற்கள் உருவானதே திமுக ஆட்சியில்தான். அதிமுக ஆட்சியில் எந்தவிதமான ஒப்பந்தமாக இருந்தாலும் வெளிப்படையாக நடைபெறுகிறது.
எனவே ஊழல் நடைபெறுகிறது என பொதுவாக விமர்சிப்பது சரியல்ல. குறிப்பிட்டு எதில் ஊழல் நடக்கிறது என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். அதைவிடுத்து பொதுவாக விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இருந்தால், நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு தொடரட்டும் என ஜெயக்குமார் தெரிவித்தார்.