அவரு ஆயிரம் சொல்வாருங்க.. அதெல்லாம் உண்மை ஆயிடுமா? கொதித்தெழுந்த ஜெயக்குமார்
கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் ஆயிரம் கருத்துக்களை சொல்வார். ஆனால் அவையெல்லாம் உண்மை ஆகிவிடாது என கே.சி.பழனிசாமியின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்க்கும் வகையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவளிக்கும் என கே.சி.பழனிசாமி தெரிவித்திருந்தார்.
கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை மீறி செயல்பட்டதாக கூறி, கே.சி.பழனிசாமியை கட்சி பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார்.
தனது நீக்கம் தொடர்பாக கருத்து தெரிவித்த கே.சி.பழனிசாமி, எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவில் இருக்கும் தன்னை நீக்க பழனிசாமிக்கோ பன்னீர்செல்வத்துகோ அதிகாரம் இல்லை என தெரிவித்தார். மேலும் அதிமுகவின் புதிய பதவி திருத்தங்களை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படியிருக்கையில், பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளரோ, பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளரோ கிடையாது என கே.சி.பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக பொதுக்குழு கூடி பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனவே கே.சி.பழனிசாமியை கட்சியிலிருந்து நீக்குவதற்கு பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை என கூறுவது தவறு. உள்நோக்கத்துடன் கே.சி.பழனிசாமி செயல்பட்டு வருகிறார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவர், ஆயிரம் குற்றச்சாட்டுகளை சொல்வார். ஆனால் அவையெல்லாம் உண்மையாகிவிடாது என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார்.