Minister dindigul seenivasan explain his speech about Jayalalitha

ஜெயலலிதாவிடமிருந்து கொள்ளையடித்த பணத்தை டி.டி.வி.தினகரன் திருடிவிட்டார் என சொல்வதற்கு பதிலாக நாக்கு உளறி ஜெயலாதா கொள்ளையடித்த பணம் என்று சொல்லிவிட்டேன் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்ததுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக் கூட்ட மேடைகளில் பேசும்போது எதையாவது உளறிக்கொட்டி சிக்கலில் மாட்டிக் கொள்வார். பின்னர் அதற்கு அவர் ஒரு நீண்ட விளக்கமும் அளிப்பார்.

ஜெயலலிதா மருத்துவமைனையில் இருந்தபோது அவர் இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் என்று நாங்கள் பொய் சொன்னோம் என ஒரு முறை பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திண்டுக்கல் அருகே பொதுக் கூட்டத்தில் பேசும்போது, ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டி.டி.வி.தினகரன் திருடி தற்போது கட்சி நடத்துகிறார் என பேசி அக்கட்சித் தொண்டர்களை அதிர்ச்சி அடையச் செய்தார்.

இதனிடையே அவர் தான் பேசிய பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக நேற்று இரவு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், கடந்த 18-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் வெற்றி விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், நான் கலந்து கொண்டு பேசினேன். அப்போது, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை கைப்பற்ற தினகரன் அணியினர் முயற்சி மேற்கொண்டதை பற்றி குறிப்பிட்டேன்.



மேலும் ஜெயலலிதாவின் புகழை வைத்து, 30 வருடங்களுக்கு மேலாக அவருடன் இருந்த சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் தவறான வழியில் கொள்ளையடித்த பணத்தை வைத்து தினகரன் அரசியல் நடத்தி வருகிறார் என்று கருத்துப்பட பேசினேன்.

அதைத்தவிர, ஜெயலலிதாவை பற்றி தவறாக எந்த கருத்தையும் பேசவில்லை. நான் என்றைக்கும் ஜெயலலிதாவின் விசுவாசி என்பது அனைவருக்கும் தெரியும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்..