எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுக வேட்பாளர் !! கலகலக்கும் தினகரன் கூடாரம் !!
நெல்லை நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளராக போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட 15 அமமுக முக்கிய நிர்வாகிகள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை மற்றும் 22 சட்டப் பேரவை இடைத் தேர்தலில் தினகரன் தலைமையிலான அமமுக படு தோல்வியைச் சந்தித்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அக்கட்சி பல இடங்களில் மூன்றாவது இடத்தைக் கூட பிடிக்கவில்லை.
இதையடுத்து தேர்தல் ரிசல்ட் கிடைத்த மறுநாள் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், இந்தகட்சி தோற்றுப் போனதால் முடங்கிவிடாது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அமமுகவில் இருந்து வெளியேற விரும்புவோர் வெளியேறலாம் என கூறினார்.
இதையடுத்து அமமுகவில் இருந்து ஏராளமானோர் வெளியேறத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக தினகரனின் வலது கரமாக செயல்பட்ட தேனி மாவட்டம் தங்க தமிழ் செல்வன் திமுகவுக்கு தாவப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நெல்லை தொகுதி அமமுக வேட்பாளராக போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட 15 பேர் இன்று அமமுகவில் இருந்து விலகி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தனர்.
தொடர்ந்து அமமுகவில் இருந்து ஏராளமானோர் விலகி வருவதால் தினகரன் கட்சி ககலகலத்து போயுள்ளது.