எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிள்ளைகள் கிடையாது.. நாங்கள்தான் அவர்களின் பிள்ளைகள்.. எடப்பாடியார் உருக்கம்.
இருவரும் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக வாழ்ந்தவர்கள், எம்ஜிஆர் ஜெயலலிதாவிற்கு பிள்ளைகள் கிடையாது நாங்களே இருவரின் பிள்ளைகள். அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து வருகிறோம்.
மதுரை அருகே திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட டி குன்னத்தூரில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமாரின் முன்முயற்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அதை இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆருக்கு இருகருகே 7 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிலையும் 400 கிலோ எடை கொண்டதாகும்.
தினமும் இந்த கோயிலுக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. ஆர்.பி உதயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் விரதமிருந்து கும்பாபிஷேகப் பணிகளை கவனித்து வந்தனர். இந்நிலையில் இந்த கோயிலை முதல்வர் துணை முதல்வர் பொதுமக்கள் வழிபாட்டிற்காக திறந்து வைத்துள்ளனர். கோவிலை திறந்து வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மேடையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: மாபெரும் இரு தெய்வங்களுக்கு கோயிலை கட்டி எழுப்பி உள்ளார் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார்.
தனக்கென வாழாத இரண்டு தெய்வங்களுக்கு கோயில் எழுப்பியுள்ள வருவாய்த் துறை அமைச்சர் ஆர். பி உதயகுமார் அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும் மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா மட்டுமே, தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர்கள் மத்தியில் தமிழ்நாட்டு மக்களுக்காக வாழ்ந்தவர் ஜெயலலிதா. வருகிற சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா எம்ஜிஆர் ஆட்சி அமைப்போம், தன்னுடைய இளம் வயதில் பட்ட கஷ்டத்தை நினைவில் கொண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். இருபெரும் தலைவர்களுக்கு கோவில் அமைத்து அற்புதம் படைத்த ஆர்பி உதயகுமாருக்கு மீண்டும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இறந்த பின்னரும் மக்கள் மனதில் வாழும் தெய்வங்களாக இருபெரும் தலைவர்களும் விளங்குகிறார்கள். இருவரும் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக வாழ்ந்தவர்கள், எம்ஜிஆர் ஜெயலலிதாவிற்கு பிள்ளைகள் கிடையாது நாங்களே இருவரின் பிள்ளைகள். அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து வருகிறோம்.
எம்ஜிஆரின் நினைவிடத்தை சீர்செய்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்துவைத்துள்ளோம். ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக பாடுபட்டவர்கள் ஜெயலலிதா எம்ஜிஆர் ஆவர். ஜெயலலிதாவுக்கு நாடே வியக்கும் அளவிற்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
நாடு செழிக்கவும் நாடு வளரவும் தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட தலைவர்கள் அவர்கள். மீண்டும் எம்ஜிஆர் -ஜெயலலிதா ஆட்சி தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென மக்களாகிய உங்களை கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.