மகிழ்ச்சி…. உற்சாகம் … 117 அடியை எட்டிய மேட்டூர் அணை…. நாளை இந்நேரம் முழுக் கொள்ளவு… ஆனந்தக் கண்ணீருடன் கொண்டாடத் தயாராகும் விவசாயிகள் !!
கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் பெருமளவு திறந்துவிடப்பட்டுள்ளதால் மேட்டுர் அணை கிடுகிடு வென நிரம்பி வருகிறது. தற்போது 117 அடியை எட்டியுள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளைக்குள் அதன் முழுக் கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4 ஆண்டுகளுக்குப் பின் மேட்டர் அணை நிரம்பி உள்ளதால் அதைக் கொண்டாட விவசாயிகள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர்.
தமிழக மக்களுக்கும், டெல்டா மாவட்ட விவசாய பெருங்குடி மக்களுக்கும் நல்ல செய்தியாக தற்போது 117 அடியாக உயர்ந்த நிலையில், மேட்டூர் அணை, நாளை காலை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகா அணைகளில் திறக்கப்படும் உபரிநீர், தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணையில் மொத்த நீர்மட்டம், 120 அடி; மொத்த கொள்ளளவு, 93.47 டி.எம்.சி.
கடந்த மாதம், 14 ஆம் தேதி 40 அடியாக மட்டுமே இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று, 117அடியை எட்டியுள்ளது. 12 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு, 85.14 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. அணை நிரம்ப, இன்னும் 3 அடி மட்டுமே தேவை என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.
கர்நாடகாவில் இருந்து தொடர்ச்சியாக உபரி நீர் வந்துகொண்டிருப்பதால், மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான, 120 அடியை நாடின எட்டவுள்ளது.
மேட்டூர் அணை கட்டி, 83 ஆண்டுகளில், 39ம் முறையாக, நடப்பாண்டு அணை நிரம்பி, உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளது. இதற்கு முன்பு , 2013ல் அணை நிரம்பி, உபரிநீர், 16 கண் மதகு வழியாக காவிரியில் வெளியேற்றப்பட்டது. நான்காண்டுகளுக்கு பின், நடப்பாண்டு அணை நிரம்பவுள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம், 117 அடியாக உயர்ந்ததால் உபரிநீர் வெளியேறும், 16 கண் மதகு ஷட்டர் மேற்பகுதி வரை, தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், அணை கடல்போல் காட்சியளிக்கிறது.
மேட்டூர் நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சுத்தம் செய்ய தேக்கப்படும் நீரை, அணை சுரங்கமின்நிலையம் அருகே, காவிரி பாலத்தில் வெளியேற்றுவதால், போக்குவரத்து பாதிப்பதோடு, சாலை சேதமடையும் நிலை உருவாகியுள்ளது. அணையிலிருந்து, டெல்டா பாசனத்துக்கு, மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றும், 20 ஆயிரம் கனஅடி நீர், காவிரியாற்றில் கரைபுரண்டு ஓடுகிறது.
தற்போது 4 ஆண்டுகளுக்குப் பின் மேட்டூர் அணை நிரம்ப உள்ளதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.