மேட்டூர் அணையின் வரலாற்று சாதனை ! 65 ஆவது முறையாக நீர்மட்டம் 100 அடியை எட்டியது !!
கேரள, கர்நாடக மாநிலங்களின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வரலாற்றில் 65வது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. டெல்டா மாவட்ட விவசாயிகள் இதனால் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடகத்தின் குடகு மாவட்டத்திலும், கேரளாவின் வயநாடு பகுதியிலும் தொடர்ந்து பெய்த பலத்த மழையின் காரணமாக மைசூரு அருகே உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கும் மற்றும் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அந்த அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்தது. இதையடுத்து அந்த அணைகளில் இருந்து விநாடிக்கு 3 லட்சம் கனஅடி அளவுக்கு தண்ணித் திறந்துவிடப்பட்டது.
இதையடுத்து கடந்த 2 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 40 அடி வரை உயர்ந்து.
இந்நிலையில் இன்று காலை மேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடியை எட்டியது. இதன் மூலம் 65-வது முறையாக 100 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 2 லட்சத்து பத்தாயிரம் கன அடியாக உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அணையை திறந்து வைக்கிறார். இதற்காக நேற்று மாலை 6.10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற அவர், பின்னர் அங்கிருந்து சேலம் சென்றார். சேலத்தில் இருந்து இன்று மேட்டூர் சென்று காலை 8.30 மணிக்கு அணையை திறந்து வைக்கிறார்.