கோவை மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

கோவை மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், நடூர் கிராமத்தில் 3 வீடுகளில் சுவர் இடிந்து விழுந்ததில் குரு, ராம்நாத், ஆனந்த்குமார், ஹரிசுதா, சிவகாமி, ஓவியம்மாள், நதியா, வைதேகி, திலகவதி, அருக்காணி, ருக்மணி, நிவேதா, சின்னம்மாள் மற்றும் சிறுமி அக்ஷயா, சிறுவன் லோகுராம் உள்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதற்கிடையே, கோவையில் பலத்த மழை காரணமாக வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்தார். மேலும், இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் ஏற்கனவே அறிவித்திருந்தார். 

இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் மழையின் காரணமாக வீடுகளின் சுவர் இடிந்து விபத்து ஏற்பட்ட இடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஏற்கனவே ரூ.4 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் ரூ.6 லட்சம் அறிவித்துள்ளார். 

மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும். இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என மறைமுகமாக மு.க.ஸ்டாலினை விமர்சித்துள்ளார். மழையால் வீடுகளை இழந்தவருக்கும், அந்த பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள வீடுகளில் வசிப்போருக்கும் புதிய வீடு கட்டித்தரப்படும் என கூறியுள்ளார்.