எல். முருகனை அமைச்சர்னு சொல்லுங்க.. தாழ்த்தப்பட்டவர் என ஏன் சொல்றீங்க..?? அண்ணாமலை மீது தபெதிக புகார்.
குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை இழிவுபடுத்தும் வகையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியும் பதிவிட்டும் வருவதாக அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை இழிவுபடுத்தும் வகையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியும் பதிவிட்டும் வருவதாக அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலித் சமூகத்தினரை பறையர் என பதிவிட்டது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை இழிவுபடுத்தும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், எனவே அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கூறப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் குமரன் இந்தப் புகாரைக் கொடுத்தார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு ஜாதி பிரிவினையை தமிழகத்தில் உண்டாக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார், பாஜக மத்திய அமைச்சர்கள் முருகனை அவரது பதவியை வைத்து பாஜகவில் உள்ள பொறுப்பை வைத்து குறிப்பிடாமல் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் எனக்கூறி சபையில் அண்ணாமலை பேசுவது அவரின் சாதிரீதியான வன்மத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
எனவே அண்ணாமலையை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அண்ணாமலையை மட்டுமே குறிப்பிட்டு புகார் அளிக்க நாங்கள் முன்வரவில்லை, தொடர்ந்து சாதிய வன்மத்துடன் கலவரத்தை தூண்டும் வகையில் அவர் பேசி வருவதால் அவர் மீது புகார் அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.