அவர்களுடன் இனி பேச்சுவார்த்தையே கிடையாது... அடாவடி பண்ணியவர்களை அலறவிட்ட சி.வி.சண்முகம்!
மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை கிடையாது என அம்மாநில அமைச்சருக்கு தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை கிடையாது என அம்மாநில அமைச்சருக்கு தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் அங்கு அணைக்கட்ட கூடாது என்று தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த எதிர்ப்பையும் மீறி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே, மேகதாது விவகாரம் தொடர்பாக பேசி தீர்வு காண வேண்டும் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
மேலும் சமீபத்தில் சென்னை வந்த கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் தமிழக மக்கள் எங்கள் சகோதரர்கள், நண்பர்கள், அவர்களுடன் காவிரி நீரை பகிர்ந்து கொள்ளும் நிலையில் சண்டையிட விரும்பவில்லை என்றும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த நேரம் கேட்கப்பட்டதாகவும் ஆனால் எந்த பதிலும் இல்லை எனவும் கூறினார். ஏற்கனவே கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழக அரசு தயாராக இல்லை என சி.வி.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமாரின் கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மீறி உள்ளதால் கர்நாடகாவுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் கிடையாது என கூறியுள்ளார். மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமதப்படுத்தவே கர்நாடக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது என கடிதத்தில் சி.வி.சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.