மன்னார்குடி அதிமுக அலுவலகத்துக்கு தீ !! திவாகரன் – அமைச்சர் காமராஜ் ஆதரவாளர்கள் மோதலா ?
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி – டி.டி.வி.தினகரனிடையே மோதல் வலுவடைந்துள்ளது. இன்று சென்னையில் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஆனால் பொதுக்குழுவில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்று தினகரன் அறிவித்துள்ளார். பரபரப்பான இந்த சூழ்நிலையில் மன்னார்குடி அதிமுக அலுவலகத்துக்கு மர்மநபர்கள் சிலர் இன்று அதிகாலை தீ வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், அலுவலகத்தின் வாயிலில் ஏற்பட்ட தீயை உடனடியாக அணைத்தனர்.
மன்னார்குடியில் திவாகரன் ஆதரவாளர்கள் மற்றும் அமைச்சர் காமராஜ் ஆகியோரது ஆதரவாளர்களிடையே கடந்த சில நாட்களாக மோதல் இருந்து வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.