இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் ஒரு அமைச்சரும் சாலையில் நடக்க முடியாது என்று மன்னார்குடி ஜீயர் தெரிவித்துள்ளார். 

இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் ஒரு அமைச்சரும் சாலையில் நடக்க முடியாது என்று மன்னார்குடி ஜீயர் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீன மடம் செயல்பட்டு வருகிறது. இதில் ஆதீனமாக உள்ள ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி காலமானார். அதனை தொடர்ந்து ஆதீனத்தின் 27 ஆவது ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அதே ஆண்டு டிசம்பர் 13 ஆம் ஆதீனகர்த்தராக பதவியேற்று ஞானபீடத்தில் அமர்ந்தார். அன்றைய தினம் தருமபுரத்தில் ஏற்பாடு மனிதனை மனிதர்களே தூக்கும் பட்டி பிரவேச நிகழச்சி நடைபெற்றது. வெள்ளிப் பல்லக்கில் புதிய ஆதீனகர்த்தர் அமரந்து வீதி உலா வந்தார். அந்த பல்லக்கை ஆதீனத்தில் உள்ள அடிதட்டு மக்கள் சுமந்து வந்தனர். இந்த நிகழ்வை தொடர்ந்து டிசம்பர் 24 ஆம் தேதி தருமை ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயிலுக்கு சென்றவரை, அங்கும் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு, வெள்ளி பல்லக்கில் அமரசெய்து பட்டினப் பிரவேசம் செய்யவைத்தனர்.

அதே போலவே காரைக்கால் திருநள்ளார் சனிபகவான் கோயிலிலும் நடைபெற்றது. இதற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்தது. மனிதர்கள் சுமக்கும் பட்டினப் பிரவேசத்தைக் கைவிட வேண்டும் என்று திரவிடக் கழக தலைவர் வீரமணியும் வலியுறுத்தியிருந்தார். நியாயமான இந்த வேண்டுகோள் புறக்கணிக்கப் படுமேயானால், பட்டினப் பிரவேசத்தை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்வதற்கு தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். மனிதனை மனிதனே சுமப்பது மனித உரிமைக்கு எதிரானது என்று திராவிடர் கழகம் கூறி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது என்பதாலும் இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதாலும் தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்வதற்கு தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு பாஜக,பாமக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. மேலும் இதனையடுத்து, தனது உயிரே போனாலும் பரவாயில்லை என்றும் தானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பதாகவும் மதுரை ஆதீனம் தெரிவித்தார். இந்த நிலையில் இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் ஒரு அமைச்சரும் சாலையில் நடக்க முடியாது என்று மன்னார்குடி ஜீயர் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பட்டின பிரவேசத்தை யாராலும் தடுக்க முடியாது; இதுபோல் தொடர்ந்து இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் ஒரு அமைச்சரும் சாலையில் நடக்க முடியாது என்று தெரிவித்தார்.