என்னை கைது செய்ய முடியுமா? பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா சவால்…
ரோஸ் வாலி நிதிநிறுவன மோசடி வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.பி.யும்நாடாளுமன்ற குழு தலைவருமான சுதீப் பந்தோபாத்யாய் கைது செய்யப்பட்டார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி ,முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என பிரதமருக்கு சவால் விடுத்துள்ளார்.
மேற்கு வங்கம், ஒடிசா உள்பட பல்வேறு மாநிலங்களில் கிளைகளை அமைத்துள்ள ரோஸ் வாலி நிதி நிறுவனத்தில் நடைபெற்றுள்ள மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்திவருகிறது. இது தொடர்பாக சென்ற வாரம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி தபஸ்பால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த எம்.பி.யும், பாராளுமன்ற குழு தலைவருமான சுதீப் பந்தோபாத்யாவை நிதி நிறுவன மோசடி தொடர்பாக நேற்று விசாரணைக்கு அழைத்துச் சென்ற சிபிஐ பின்னர் அவரை கைது செய்தது.
சுதீப் பந்தோபாத்யாய் மீது ரோஸ் வாலி நிதி நிறுவனத்தின் சிறு நிதித்திட்டங்களுக்காக மார்க்கெட்களில் இருந்து 60 ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை புவனேஸ்வருக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது.
சுதீப் பந்தோபாத்யாய் கைது செய்யப்பட்டதை அறிந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் பா.ஜ.க. தலைமை அலுவலத்தின் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பா.ஜ.க. அலுவலத்ததில் துணை ரானுவப் படை பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுதீப் பந்தோபாத்யாய் கைது செய்யப்பட்டதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களை அரசியல் ரீதியாக பழிவாங்கும் வகையில் மோடி செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள மம்தா முடிந்தால் என்னையும் கைது செய்யுங்கள் என்று சவால் விட்டுள்ளார்.
மத்திய அரசின் இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்தும், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்துள்ளதைக் கண்டித்தும் இன்று அவசர கூட்டமும், அதனைத் தொடர்ந்து போராட்டமும் நடைபெறவுள்ளதாக மம்தா அறிவித்துள்ளார்.
