திமுக தலைவரை சந்திக்க தயாரான மம்தா...! எப்போது சென்னை வருகிறார் தெரியுமா?
திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மம்தா பானர்ஜி சென்னைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய பாஜக அரசிற்கு எதிராக தேசிய அளவில் ஓங்கி ஒலிக்கும் குரல்களில் பிரதானமானது மம்தா பானர்ஜி குரல். பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராகவும், பாஜக-காங்கிரஸுக்கு மாற்றாக மூன்றாவது தேசிய அணியை உருவாக்குவதிலும் மும்முரமாக செயல்பட்டு வருகிறார் மம்தா பானர்ஜி.
பாஜக-காங்கிரஸுக்கு மாற்றாக மூன்றாவது தேசிய சக்தியை உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இப்படியான சூழலில், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுப்பதால், மத்திய பாஜக அரசில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம் கட்சி, பாஜகவுடனான கூட்டணியிலிருந்து விலகியுள்ளது.
இதனிடையே மம்தா திமுக செயல்தலைவர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முன்வைத்த மாற்று அணி கோரிக்கையை ஆதரிக்க வேண்டும். பாஜக, காங்கிரஸ் அல்லாத மாற்று அணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதைதொடர்ந்து ராஜ்யசபா எம்.பி. கனிமொழியை மம்தா சந்தித்து பேசினார். அப்போது, தற்போது காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள திமுகவின் நிலைப்பாடு குறித்தும் மமதா கேட்டார்.
தீவிர அரசியலில் இருந்து முதுமையால் ஓய்வில் இருக்கும் கருணாநிதியை தாம் சந்திக்க விரும்புவதாகவும் மம்தா தெரிவித்துள்ளார்.
கருணாநிதி தற்போது நலமுடன் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் வரலாம் எனவும் செயல்தலைவர் ஸ்டாலினிடம் இதுகுறித்து பேசுவதாகவும் கனிமொழி பதில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மம்தா பானர்ஜி சென்னைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.