ஜிஎஸ்டி-க்கு மம்தா பானர்ஜி கொடுக்கும் விளக்கத்த பாருங்க..!
ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதுவித விரிவாக்கத்தை கொடுத்திருக்கிறார்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு, பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஆகியவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி விட்டதாக பொருளாதார நிபுணர்களும் எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.
ஆனால், ஜிஎஸ்டி வரிவிதிப்பு, பணமதிப்பு நீக்கம் போன்ற பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்தியாவின் பொருளாதார சிறப்பான வளர்ச்சியை அடைந்துவருவதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துவருகிறார்.
அதேபோல், ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் வர்த்தகர்கள் தங்கள் வியாபாரத்தை எளிமையாக வளப்படுத்திவருவதாகவும் மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால், இந்தியாவில் தொழில் தொடங்கும் வழிமுறை எளிமையாக உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறிவருகிறார்.
எனினும் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளையும் பொருளாதார கொள்கைகளையும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜிஎஸ்டி-க்கு புதிய விரிவாக்கம் ஒன்றை அளித்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்பது ஒரு பேரழிவு. ஜி.எஸ்.டி என்பது மிகப்பெரும் சுயநல வரி (Great Selfish Tax). வேலைவாய்ப்பைப் பறித்துக்கொண்டு, வணிகத்தைத் தாக்குவதுதான் ஜி.எஸ்.டி வரி என மம்தா விமர்சித்துள்ளார்.
மேலும், பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ம் தேதியை அனைவரும் எதிர்க்க வேண்டும் என்றும் ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ம் தேதியை தேசிய கறுப்பு தினமாக அனுசரிக்க எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.