முதலமைச்சர் பன்னீர்செல்வத்திடம் தஞ்சம் புகுத்த மைத்ரேயன் எம்.பி., மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

சற்று நேரத்திற்கு முன்பு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த நிலையில் மைத்ரேயன் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் இன்று காலை 10. 30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து அக்கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள சசிகலா 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்திக்க நேரம் கோரியிருந்தார். இதையடுத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 12 பேருக்கு மாலை 5.30 மணிக்கு சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்தார். 

ஆளுநர் நேரம் ஒதுக்கியதையடுத்து அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூவத்தூரில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தார். பின்னர், கிண்டி ராஜபவனில் ஆளுநர் வித்யாசர் ராவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

மேலும் அதிமுக அதரவு எம்.எல்.ஏக்களின் ஆதரவு பட்டியலை ஆளுநரிடம் வழங்கினார். அவருடன் 12 மூத்த நிர்வாகிகளும் ஆளுனரை சந்தித்தனர்.

இந்த சந்திப்பு முடிவடைந்தடத்தையடுத்து ஒ.பி.எஸ் ஆதரவு எம்.பி மைத்ரேயன் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆளுநரை சந்தித்து சுமார் 30 நிமிடம் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து அவர்கள் புறப்பட்டு சென்றனர்.