Shashikala fighting against the growing support for pannircelvatti currently performing team goes alone

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணைக்கு நடவடிக்கை எடுத்ததால் தான் முதலமைச்சர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தற்போது தனி அணியாக செயல்பட்டு வரும் பன்னீர்செல்வத்திற்கான ஆதரவு பெருகி கொண்டே செல்கிறது.

இதனிடையே ஜெயலலிதா மரணம் குறித்து பலருக்கும் சந்தேகம் உள்ளதாகவும் அந்த சந்தேகத்தை போக்கும் கடமை அரசுக்கு உள்ளது எனவும், அதனால் அதற்காக நீதி விசாரணை அமைக்கப்படும் என முன்னாள் முதல்வராக இருந்தபோது பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

அதற்காக ஓ.பி.எஸ் தரப்பில் இருந்து ஆளுனரிடமும், ஜனாதிபதியிடமும் நீதி விசாரணி அமைக்க கோரி மனு கொடுக்கப்பட்டது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திராணி இருந்தால் ஜெ. மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கட்டும் என ஓ.பி.எஸ் நேரடியாக சவால் விடுத்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு வாய் திறக்கவில்லை.

மேலும் வரும் 8 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஜெ. மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்க வலியுறுத்தி ஓ.பி.எஸ் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னை கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆரம்பித்ததும்தான் பன்னீர்செல்வத்தின் பதவி பறிக்கப்பட்டது. எனவே, இதில் அவர் தாமதம் செய்துவிட்டதாக கூறுவதை ஏற்க முடியாது.

இன்னும் 10 நாட்களில் சட்டப்பேரவை கூடியாக வேண்டும். அப்போது, மீண்டும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

அம்மாவின் ஆத்மா, அதிமுகவை ஒரு குடும்பத்தின் பிடியில் போக விடாது.

பொதுக்குழுவை கூட்டினால் கூட பெருவாரியான ஆதரவு எங்களுக்கு இருப்பது தெரிந்துவிடும் என்பதால்தான் அவர்கள் அதை கூட்டாமல் தாமதம் செய்து வருகிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவுக்கான காரணம் குறித்து, ஆளுநரிடம் ஏற்கெனவே விளக்கியுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.