இட ஒதுக்கீட்டுக்கு சமாதி...?? மோடியின் திட்டத்தை புட்டு புட்டுவைத்து நாடாளுமன்றத்தை அதிரவைத்த மதுரை எம்.பி.!!
இந்த அரசின் செயல் ஆழ்ந்த சந்தேகத்தை உருவாக்குவதாக இருக்கிறது. இட ஒதுக்கீட்டையே முற்றிலுமாக ஒழித்துக்கும் கட்டும் முயற்சியின் துவக்கமாக இது இருக்குமோ என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம்.
மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான நீட் தேர்வில் ஒ.பி.சிக்கு எதிரான அறிவிக்கையை திரும்ப பெற்றிடுக என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். அகில இந்திய மருத்துவ உயர் கல்விக்கான நீட் தேர்விற்கான அறிவிப்பு வெளி வந்துள்ளது. அந்த அறிவிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருகான இட ஒதுக்கீடு மட்டும் இல்லை. அதாவது மத்திய அரசினுடைய கல்வி நிறுவனங்களில் ஓபிசிக்கான இட ஒதுக்கீடு உள்ளது; மாநிலங்களின் கல்லூரியிலிருந்து பெறுகிற இடங்களுக்கு ஒ.பி.சி.க்காண இடமில்லை என்று அந்த அறிவிப்பு கூறுகிறது. இது மிகப் பெரிய அதிர்ச்சியை உண்டாக்குகிறது.
நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பிரிவில் ஏறக்குறைய மூவாயிரத்து எண்ணூறு மாணவர்கள் இருக்கிறார்கள். இதில் மிக அதிகம் பாதிக்கப்படுவது தமிழகம். ஏனென்றால் தமிழகத்தில் தான் மிக அதிகமான மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. பிற்படுத்தப்பட்ட மக்களினுடைய எண்ணிக்கை மிக அதிகம் இருக்கும் ஒரு மாநிலம். தமிழக அரசினுடைய இட ஒதுக்கீட்டில் ஐம்பது சதவீதம் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு இன்றைக்கு தமிழகத்திலே அமலிலே இருக்கிறது. இதை மாநில அரசு மத்திய தொகுப்புக்கு கொடுப்பதன் மூலம் இருபத்தி மூன்று சதவீதத்தை நாங்கள் இழக்கிறோம் ஏனென்றால் இருபத்தி ஏழு சதவீதம் தான் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது.
இப்பொழுது அந்த இருபத்தி ஏழு சதவீதமும் இல்லையென்றால் ஏறக்குறைய ஐம்பது சதவீதத்தையும் அதாவது முழு முற்றாக இட ஒதுக்கீட்டையும் ஒ.பி.சி பிரிவினர் இழக்கிற மாநிலமாக தமிழகம் மாறிவிடும்.இந்த அறிவிப்புக்கு பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தபின்னும் இப்பொழுது வரை மத்திய அரசு மெளனம் சாதிக்கிறது. இது மிகப்பெரிய ஆபத்தின் முன்னுதாரணம் ஆகும்.
சமமற்றவர்களை சமமாக நடத்தக்கூடாது என்பது தான் இட ஒதுக்கீட்டின் சாரம். சமூக ரீதியாக, கல்வி ரீதியாக சமமற்றவர்களை சமமாக நடத்தக்கூடாது என்று அரசியல் சாசனம் சொல்கிறது. அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் இந்த உரிமையை மறுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. ஆனால் மத்திய அரசின் ஒரு துறை இதனை மறுக்கிறது. அதனை மத்திய அரசு கள்ளத்தனமாக அனுமதிக்கிறது என்றால். இந்த அரசின் செயல் ஆழ்ந்த சந்தேகத்தை உருவாக்குவதாக இருக்கிறது.
இட ஒதுக்கீட்டையே முற்றிலுமாக ஒழித்துக்கும் கட்டும் முயற்சியின் துவக்கமாக இது இருக்குமோ என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம்.மத்திய அரசு உடனடியாக இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்று நான் வழியுறுத்துகிறேன். இது அரசியல் சாசன சட்டத்துக்கும், மண்டல் கமிஷன் உடைய அறிக்கைக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் விரோதமானது. பிற்படுத்தப்பட்ட மக்களின் மீதான இந்த இரக்கமற்ற தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்மந்தப்பட்ட துறையினுடைய இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும். இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பதை நான் இந்த அவையிலே வலியுறுத்துகிறேன்