20 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் எங்கள் அணியில் இணைவார்கள்... புது குண்டு போடும் மதுசூதனன்!
அதிமுகவின் இரு அணிகளும் மீண்டும் ஒன்றிணையுமா என்ற கேள்வி மலையேறிப் போய் தற்போது, எஞ்சியிருக்கும் மூன்று ஆண்டுகளையும் அதிமுக அரசு நிறைவு செய்யுமா என்ற அளவுக்கு தமிழக அரசியல் நிலவரம் கலவரமாகி உள்ளது.
சிறையில் இருந்து வந்தாலும் சீற்றம் குறையாமல் டிடிவி.தினகரன் வீசும் ஒவ்வொரு பந்தும், எடப்பாடி பழனிச்சாமி அரசை அசுர வேக பவுன்சர்களாக நோகடித்து வருகிறது.... 5 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே அதிகமாகக் கொண்டு ஆட்சி நடத்தி வரீங்க என்பதை மறக்க வேண்டாம் என்று தினகரன் தரப்பினர் எடப்பாடி அரசை வெளிப்படையாகவே விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தச் சூழலில் எடப்பாடி அணியில் இருக்கும் 20 எம்.எல்.ஏ.க்கள்., ஓ.பி.எஸ். டீமில் விரைவில் இணையப் போவதாகத் தெரிவித்து புது குண்டு போட்டிருக்கிறார் மதுசூதனன்.
சென்னை தண்டையார்பேட்டையில் அம்மா மகளீர் நற்பணி மன்ற திறப்பு விழாவில் மதுசூதனன் கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " தினகரன் பிடியில் இருக்கும் MLA க்களை சஸ்பென்ட் செய்யவேண்டும். சசிகலாவின் தயவால் நிதியமைச்சரான ஜெயக்குமார் தற்போது நாடகத்தை நடத்தி கொண்டு இருக்கிறார். அவர் ஒரு விளம்பர வெறியர் இவர்கள் நடத்தும் நாடகத்திற்கு ஒ.பி,எஸ் சிக்கமாட்டார். விரைவில் 20 MLA க்கள் ஒ.பி,எஸ் அணியில் இணைய உள்ளனர்." இவ்வாறு மதுசூதனன் தெரிவித்தார்.