#BREAKING மதுசூதனனை நலம் விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு இபிஎஸ், சசிகலா ஒரே நேரத்தில் வருகை..!
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனை நலம் விசாரிக்க எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோர் ஒரே நேரத்தில் வருகை தந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனை நலம் விசாரிக்க எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோர் ஒரே நேரத்தில் வருகை தந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மதுசூதனனுக்கு கடந்த 18ம் தேதி திடீரென மூச்சத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, இவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என தலைமை அறிவுறுத்தியது.
இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன்பு அப்பல்லோ சென்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, நந்தம் விஸ்வநாதன், முக்கூர் சுப்பிரமணியன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மருத்துவர்களிடம் மதுசூதனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். தற்போது சசிகலாவும் மதுசூதனன் உடல்நிலை குறித்து விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். சசிகலாவை வருகையை அடுத்து மருத்துவமனையில் இருந்து எடப்பாடி பழனிசாமி வெளியேறினார்.
சமீப காலமாக அதிமுகவை கைப்பற்றப்போவதாக சசிகலா ஆடியோ வெளியிட்டு வரும் நிலையில், அப்பல்லோ வந்த சசிகலா காரில் அதிமுக கொடி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.