madhavan said that deepa forgot his name to mention in nomination form

வேட்புமனுவில் தமது பெயரை குறிப்பிட தீபா மறந்து விட்டார் என்று அவரது கணவர் மாதவன் கூறியுள்ளார். மேலும் தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் களம் இறங்கும் வரை, அதிமுக தொண்டர்களின் 90 சதவிகித ஆதரவு தீபாவுக்கே இருந்து வந்தது.

ஆனால் தீபா பேரவை நியமனத்தில் நிகழ்ந்த குளறுபடிகள், அவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி, கணவன் மனைவிக்கு இடையேயும் விரிசலை ஏற்படுத்தி விட்டது.

ஒரு கட்டத்தில், தம்மை அழிக்க எதிரிகள் தேவை இல்லை. குடும்பத்தில் உள்ளவர்களே போதும் என தீபாவே கொந்தளித்ததாகக் கூறப்பட்டது.

அடுத்த சில நாட்களில், யாருடைய தூண்டுதலின் பேரிலேயே தீபா செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டிய மாதவன், ஜெயலலிதாவின் சமாதியில் மலரஞ்சலி செலுத்திவிட்டு தனிக்கட்சி தொடங்கப்போவதாகக் கூறினார்.

அதை கண்டு, "எள்ளுதான் எண்ணெய்க்கு காயுது...எலி புழுக்கை என்னத்துக்கு காயுது" என்று கிண்டல் அடித்த மக்கள், அவரது கூற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

காரணம் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற வகையில் தீபாவை வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம். அவரது கணவரையும் ஏற்க முடியுமா? என்பதே அதற்கு காரணம்.

இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த தீபா, மனுவில் கணவர் மற்றும் சார்ந்தவர்கள் தொடர்பான கேள்விகளுக்கு எதுவும் இல்லை என்று பதில் அளித்திருந்தார்.

இது குறித்து ஊடகங்களிலும் பல்வேறு சர்ச்சைகள் கிளப்பப் பட்டிருந்தன. ஆனால் தீபா அது பற்றி எந்த பதிலையும் கூறவில்லை.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தீபாவின் கணவர் மாதவன், வேட்பு மனுவில் பதற்றம் காரணமாக, தம்முடைய பெயரை தீபா மறந்து விட்டதாக கூறி அந்தர் பல்டி அடித்துள்ளார்.

மேலும், யாருடைய தூண்டுதலின் பேரிலும் தீபா செயல்படவில்லை, சுயமாகத்தான் செயல்படுகிறார் என்றும் அவர் சான்றிதழ் வழங்கி உள்ளார்.

கணவர் என்ற இடத்தில் மாதவனை குறிப்பிடாமல், டீசண்டாக அவரை டைவர்ஸ் செய்துள்ளார் தீபா. 

அது புரியாமல் இன்னும் உளறி கொண்டிருக்கிறார் மாதவன் என்றே தீபா ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.