சிகிச்சை பலனின்றி காலமானார் ம.நடராஜன்...! பரோலில் வருகிறார் சசிகலா...!
உடல்நலக்குறைவால் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா கணவர் ம.நடராஜன் காலமானார்.
கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் அவதிபட்டு வந்த சசிகலா கணவர் நடராஜனுக்கு கடந்த அக்டோபர் மாதம் உறுப்பு கிடைத்தது. பின்னர், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஒரு மாத சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.
பின்னர் வீட்டில் இருந்தே செக் அப் செய்து வந்தார். இந்நிலையில், சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 16ம் தேதி இரவு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் குளோபல் மருத்துவமனை தெரிவித்தது.
ம.நடராஜனுக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட நடராஜனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது என்றும் குளோபல் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1.35 மணிக்கு நடராஜன் உயிரிழந்தார். அவரின் உடல் பெசண்ட் நகர் வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சசிகலா பரோலில் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.