வைகை ஆற்று நீரை தெர்மகோல் கொண்டு மூடியது முதல் - நமக்கெல்லாம் கொரோனா வராது என்று கதை விட்டது வரை, முழுக்க முழுக்க காமெடி சேனல் நடத்திக் கொண்டு இருக்கிறார் செல்லூர் ராஜு என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் மதுரையில் ‘தமிழகம் மீட்போம் - 2021’ சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசினார். “மதுரைக்கு மோனோ ரயில் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். வந்ததா, இல்லை. தேவர் சிலை அருகே பறக்கும் பாலம் என்றார்கள். வந்ததா, இல்லை. ஆனால் மதுரையை இரண்டாவது தலைநகராக்கப் போகிறோம் என்ற காமெடியை மதுரை அமைச்சர்களாக இருக்கும் செல்லூர் ராஜுவும், உதயகுமாரும் விடவில்லை.

"கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தில் ஏறி வைகுண்டம் காட்டுவேன்" என்றானாம். அதைப் போல மதுரைக்கு சிறுசிறு நன்மைகளைக் கூடச் செய்து கொடுக்க முடியாத இவர்கள், மதுரையைத் தலைநகர் ஆக்குவேன் என்று வாய்ப்பந்தல் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். மதுரை வைகை நதியை லண்டன் தேம்ஸ் நதி போலவும், மதுரையை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைப் போலவும், இத்தாலியின் ரோம் நகரைப் போலவும் மாற்றுவேன் என்றும் செல்லூர் ராஜு சொன்னார். என்னைப் பொறுத்தவரையில் செல்லூர் ராஜுவுக்கு நான் சொல்வது, சிட்னியாக, ரோம் நகராக மாற்றவேண்டாம். இப்போது இருக்கும் மதுரையை மேலும் கெடுக்காமல் இருந்தாலே போதும் என்பதுதான் என்னுடைய மிகமிகத் தாழ்மையான வேண்டுகோள்.

