தமிழகத்தில் விடுதலைப்புலிகள், மாவோயிஸ்ட்... திமுக அரசை கடுமையாக எச்சரிக்கும் பாஜக..!
தமிழகத்தில் சமீப காலமாக விடுதலைப் புலிகள், மாவோயிஸ்ட் அமைப்புகளின் செயல்பாடுகள் தீவிரமாகி வருகிற நிலையில், திமுக அரசு கவனத்துடன் இருக்க வேண்டியது கட்டாயமாகிறது என்று பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள பதிவில், “விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த சபேசன் என்ற நபர் சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டிருக்கிறார். போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை கடத்தி, அதன் வருவாயில் மீண்டும் விடுதலை புலிகள் இயக்கத்தை இயக்க முயற்சி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டியுள்ளது தேசிய புலனாய்வு நிறுவனம். சென்னை உட்பட 12 இடங்களில், மாவோயிஸ்ட் தீவிரவாத இயக்கத்தின் பயிற்சி கூடங்கள் மற்றும் மறைவிடங்களில், நேற்று முதல் தேசிய புலனாய்வு நிறுவனம் சோதனையிட்டு வருகிறது.
சமீப காலமாக இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் தீவிரமாகி வருகின்ற நிலையில், திமுக அரசு கவனத்துடன் இருக்க வேண்டியது கட்டாயமாகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் தமிழ் தேசியம், தனி ஈழம் பேசும் பிரிவினைவாத அமைப்புகளும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் மாவோயிச தீவிரவாத இயக்கங்கள் பலவும் திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருந்தது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் இத்தகைய சட்ட விரோத செயல்கள் நடைபெறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசும், காவல் துறையும் நிலைமையின் விபரீதம் உணர்ந்து, இந்த தீய சக்திகளை அடையாளம் கண்டு முற்றிலும் ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். எச்சரிக்கை!” என்று பதிவில் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.