திமுக, அதிமுக கூட்டணி இறுதியாகி வரும் சூழலில், தினகரன் தனித்துப் போட்டியிட்டு தனது பலத்தைக் காட்டும் முஸ்தீபுகளிலும் தினகரன் ஈடுபட்டுள்ளார்.

திமுக, அதிமுக கூட்டணி இறுதியாகி வரும் சூழலில், தினகரன் தனித்துப் போட்டியிட்டு தனது பலத்தைக் காட்டும் முஸ்தீபுகளிலும் தினகரன் ஈடுபட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதிமுகவை மீண்டும் மீட்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு கட்சி நடத்தி வரும் தினகரன், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காகக் காத்திருக்கிறார். ஆர்.கே. நகர் தொகுதியில் அதிமுக, திமுக என இரு கட்சிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் தினகரன். இதனால், அதிமுகவில் அதிர்ச்சி அலைகள் உண்டாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிர்வாகிகள் அனைவரும் ஓபிஎஸ் - இபிஎஸ் பக்கமே அணிவகுத்தனர்.

இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகளில் தேர்தல் நடந்தால், அவற்றில் வெற்றிக் கனியைப் பறித்து அதிமுகவை தன் வழிக்குக் கொண்டுவர தினகரன் நினைத்தார். ஆனால், எதிர்பார்த்தபடி தேர்தல் நடைபெறவில்லை. இனி அவருக்கு உள்ள ஒரே வாய்ப்பு, நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமே. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவைவிட அதிக ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றால், மக்கள் ஆதரவும் தொண்டர்கள் ஆதரவும் தனக்கே இருப்பதை தினகரன் நிரூபிக்கலாம். அதற்காகத்தான் தற்போது தினகரன் காய் நகர்த்தி வருகிறார். 

இது ஒரு புறம் இருக்க, திமுக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், அதிமுக-பாஜக-பாமக கூட்டணியும் உறுதியாகி வருகிறது. இன்னும் தேமுதிக, தமாக போன்ற கட்சிகள் மட்டுமே இன்னும் தங்கள் நிலைப்பாட்டைப் பற்றி எதுவும் அறிவிக்கவில்லை. ஒரு வேளை இந்த இரு கட்சிகளும் அதிமுக பக்கம் சாய்ந்தால், தினகரன் தனித்து போட்டியிடும் சூழல் உருவாகும். 

தற்போதைய நிலையில், தனித்து போட்டியிடும் சூழல் வந்தால், அதற்கும் தயாராகவே தினகரன் இருப்பதாக அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை மனதில் வைத்துதான், “நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டே டிடிவி தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்” என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட வெற்றிவேல் தெரிவித்திருக்கிறார். தற்போதைய நிலையில் 40 தொகுதிகளிலும் அமமுக வேட்பாளர்கள் தயார் என அக்கட்சி வட்டாரங்களிலும் பேசப்படுகின்றன.

இதுபற்றி அக்கட்சியினர் சிலரிடம் விசாரித்தபோது, “1989-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பிளவுபட்டு தேர்தலை சந்தித்தபோது, ஜெயலலிதா 27 தொகுதிகளில் வெற்றி பெற்றார். இதன்மூலம் தொண்டர்கள் ஆதரவு ஜெயலலிதாவுக்கு இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகளையும் இடங்களையும் பிடித்து, அதிமுக தொண்டர்களின் ஆதரவு தனக்கே இருக்கிறது என தினகரன் நிரூபிப்பார். இதற்காக 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவும் தினகரன் தயாராகவே இருக்கிறார்” என்று தெரிவித்தார்கள்.