மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம்… வெளியூர் நபர்கள் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு
9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிந்தது.
சென்னை: 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிந்தது.
தமிழகத்தில் விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. அத்துடன் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
ஒட்டு மொத்தமாக 9 மாவட்டங்களில் 23,998 பதவிகளுக்கு 79,433 பேர் களத்தில் உள்ளனர். கடந்த சில நாட்களாக தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் அரசியல் கட்சியினர் ஓட்டு வேட்டையாடினர். திமுக,அதிமுக, பாஜக, காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் என அனைத்து கட்சிகள் மக்களிடம் ஆதரவு திரட்டின.
அனைத்து கட்சிகளின் தேர்தல் பிரச்சாரமும் தேர்தல் ஆணையம் அறிவித்தபடி இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளில் வாக்காளர்களை தவிர்த்து வெளியூர் ஆட்கள் வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது.
முதல் கட்ட வாக்குப்பதிவு மொத்தம் 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 1577 கிராம ஊராட்சி தலைவர்களுக்கு நடக்கிறது. இந்த முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 41.93 லட்சம் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளனர்.