பொங்கல் பரிசு தொகுப்பு என்ற பெயரில் தரமற்ற பொருட்கள் கொடுத்து ஏமாற்றியதை மக்கள் மறக்கவே மாட்டார்கள். ரூ.5 - 10 வரையே செலவாகும் ஒரு துணிப்பைக்கு, ரூ.60 என்று கணக்கு எழுதி ஊழல் செய்திருக்கிறார்கள். ஊழல் என்பது திமுகவுக்கு புதிதல்ல. எனவே, மக்கள் இனியும் ஏமாறக் கூடாது. 

எதற்கெடுத்தாலும் சென்னை எங்கள் கோட்டை என்று திமுக சொல்லிக்கொண்டிருக்கிறது. அந்தக் கோட்டையில் ஓட்டை போடும் வேலையை பாஜக தொடங்கிவிட்டது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மாநிலத்தலைவர் அண்ணாமலை வடசென்னை, தென்சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தின் தலைநகரம் சென்னை. ஆனால், கடந்த 70 ஆண்டுகளாகவே சென்னை நகரின் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவே இல்லை. சென்னையை மேம்படுத்த ஆளும் அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. ஆனால், சிங்காரச் சென்னை என்று மட்டும் சொல்லிக்கொள்வார்கள். ஆனால், அதற்கான முயற்சிகளை செய்யமாடார்கள். மழைக்காலங்களில் சென்னை மோசமாகப் பாதிக்கப்படுகிறது. ஆனால், அரசியல்வாதிகள் மட்டும் வேட்டியை மடித்துக்கட்டி கொண்டு மழைவெள்ளத்தை ஆய்வு செய்கிறார்கள்.

நீங்கள் யோசித்து பாருங்கள். இப்போதைய முதல்வர், மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது, அமைச்சராக இருந்தபோது, துணை முதல்வராக இருந்தபோது சென்னை இப்படித்தான் இருந்தது. இப்போது அவர் முதல்வராகிவிட்டார். சென்னை நிலைமை இன்னும் மோசமாகவே இருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் பொதுமக்களிடமும் குறிப்பாக பெண்களிடம் வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வீசினார். ஆனால் அதில் சிலவற்றைகூட நிறைவேற்ற முடியாமல் இருக்கிறது திமுக அரசு. குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 தருவோம் என்றார். இப்போது குடும்பத்தலைவிகள் யார் என ஆய்வு செய்துகொண்டிருப்பதாக தமிழக நிதித் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொல்கிறார்.

அதேபோல கூட்டுறவு நகைக் கடன், கல்விக் கடன் ரத்து போன்ற அறிவிப்புகள் எல்லாம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. இப்போது பாருங்கள், உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை காணொலி காட்சி மூலமாக மு.க.ஸ்டாலின் நடத்தி கொண்டிருக்கிறார். எதற்கெடுத்தாலும் சென்னை எங்கள் கோட்டை என்று திமுக சொல்லிக்கொண்டிருக்கிறது. அந்தக் கோட்டையில் ஓட்டை போடும் வேலையை பாஜக தொடங்கிவிட்டது. பொங்கல் பரிசு தொகுப்பு என்ற பெயரில் தரமற்ற பொருட்கள் கொடுத்து ஏமாற்றியதை மக்கள் மறக்கவே மாட்டார்கள். ரூ.5 - 10 வரையே செலவாகும் ஒரு துணிப்பைக்கு, ரூ.60 என்று கணக்கு எழுதி ஊழல் செய்திருக்கிறார்கள். ஊழல் என்பது திமுகவுக்கு புதிதல்ல. எனவே, மக்கள் இனியும் ஏமாறக் கூடாது.

 மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகள் மற்றும் அதன் பணிகள் விரிவுபடுத்தப்பட்டதால்தான், மக்கள் அனைவரும் இன்று நிம்மதியாக நடமாட முடிகிறது. ஒருபக்கம் மத்திய அரசின் பாஜக ஆட்சி, பிரதமர் மோடியின் மகத்தான மக்கள் சேவை. இன்னொரு பக்கம் திமுகவின் 8 மாத அவல ஆட்சி. இந்த இரண்டில் எது உங்களுக்கு வேண்டும் என்பதை நீங்களே சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பாஜக அங்கீகாரம் பெற்றால் உண்மையிலேயே இந்தச் சென்னையை சிங்கார சென்னையாக மாற்றிக்காட்டுவோம். சென்னையின் தலையெழுத்தே மாறும். எத்தனை மழை வந்தாலும் தண்ணீர் தேங்காமல் இருக்கும் நிலையை சென்னைக்கு மாற்றிக் காட்டுவோம்” என்று அண்ணாமலை பேசினார்.