வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வுக்கான அட்டவணையை முன்கூட்டியே வெளியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வுக்கான அட்டவணையை முன்கூட்டியே வெளியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வளரும் இளம் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பாக வளர்ந்து வரும் கல்வி குறித்தான ஒரு நாள் கருத்தரங்கத்தினை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்து உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், டீன் ஏஜ் பருவத்துக்கு மாணவர்கள் வரும் போது, அவர்களை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்பது தொடர்பான கருத்தரங்கை, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் துவக்கி வைத்தேன். கற்றல் இடைவெளி, ஒழுக்கக்குறைபாடு ஆகியவற்றை எப்படி போக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். சமூக - பொருளாதார பின்னடைவுகள் மாணவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தவறான தாக்கத்தைப் போக்க வேண்டும்.

கொரோனாவுக்குப் பின் வகுப்பறைக்கு வரும் மாணவர்களை எப்படி கையாள வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்துகொள்ளும் நிகழ்வுகளை தவிர்க்க, பல்வேறு நிகழ்ச்சிகள், ஆரோக்கியமான போட்டிகள், நன்னெறி வகுப்புகள், உளவியல் சார்ந்த ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. இதையும் மீறி மாணவர்கள் ஆசிரியர்களிடம் முறைகேடாக நடந்துகொள்ளும் போது தான் மாற்றுச்சான்றிதழ் தரப்படுகிறது. அப்படியான மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் தரலாம் என்று அவர்களின் பெற்றோர்களே கூறுகின்றனர். ஏற்கனவே பல மாவட்டங்களில் ஆசிரியர்களிடம் தவறாக நடந்துகொண்ட மாணவர்களுக்கும், முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் மாற்றுச்சான்றிதழ் ஏதும் வழங்கப்படவில்லை; பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

நிலைமை கைமீறி செல்லும் போதுதான் மாற்றுச்சான்றிதழ் வழங்கப்படும். இனி மாணவர்கள் எந்தவித தவறான செயல்களிலும் ஈடுபடக்கூடாது. காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றுவது தொடர்பாக இதுவரை முடிவு எடுக்கவில்லை. முதலமைச்சருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப்பள்ளிகள், அங்கன்வாடிகளில் LKG, UKG வகுப்புகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. LKG, UKG வகுப்புகள் தொடர்ந்து செயல்படும். அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையைத் தொடங்குவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். தேர்வுகள் முடிந்த பிறகே மாணவர் சேர்க்கை தொடங்கும். வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வுக்கான அட்டவணையை முன்கூட்டியே வெளியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு என்று தெரிவித்தார்.