மு.க.ஸ்டாலின் முதல்வரானதும் ஊழல் அமைச்சர்கள் அனைவரும் சிறைச்சாலைக்குத்தான் போக வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.  

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசை ஆதரித்து மதிமுக பொதுச்செயலார் வைகோ பிரசாரத்தில் ஈடுபட்டார். ரெட்டியாபட்டியில் வைகோ பேசுகையில், “தற்போது தமிழகத்தில் விவசாயிகளுக்கு விரோதமான ஆட்சி நடைபெற்றுகொண்டிருக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை ஆதரித்து வாக்களித்தனர் அதிமுக எம்.பி.க்கள். டெல்லியில் 150 நாட்களாக விவசாயிகள் வெயிலிலும் பனியிலும் போராடி வருகின்றனர். ஆனால், அவர்களை மோடி அரசு கண்டு கொள்ளவில்லை.
ஆனால், தமிழகத்துக்கு வந்து திமுகவினர் பெண்களை மதிப்பதில்லை என மோடி கூறுகிறார். ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் 2 பெண்களைச் சுட்டுக்கொன்றாவர்கள் யார்? இதற்கு பிரதமர் எந்த கண்டனமாவது தெரிவித்தாரா? அதிமுக ஆட்சி என்பது ஊழல் நிறைந்த அரசு. அதனால்தான் அதிமுக அரசு மீது ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் புகார் மனு அளித்தார். மு.க.ஸ்டாலின் முதல்வரானதும் ஊழல் அமைச்சர்கள் அனைவரும் சிறைச்சாலைக்குத்தான் போக வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரமும் மோட்டார் வாங்க மானியமும் வழங்கப்படும். பனைதொழில் ஊக்குவிக்கப்படும். புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் புகுத்தப்படும். பயிர் காப்பீடு திட்டம் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் தனியொருவர் நிலத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் இழப்பீடு வழங்கப்படும். ஏரி, குளங்களை தூர் வார ரூ10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். எனவே, திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றியைத் தேடித் தர வேண்டும்” என்று வைகோ பேசினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred