என் அப்பா செய்தது தவறு என்று ஸ்டாலின் மன்னிப்பு கேட்கட்டும்.. நானே அறிவாலயம் வருகிறேன்.. அண்ணாமலை அதிரடி.
கச்சத்தீவை தாரை வார்த்தது நாங்கள்தான் என்றும், என் அப்பா கருணாநிதி தவறு செய்து விட்டார் என ஸ்டாலின் மன்னிப்பு கேட்டால் நானே அறிவாலயம் வந்து அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்ல தயாராக இருக்கிறேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவை தாரை வார்த்தது நாங்கள்தான் என்றும், என் அப்பா கருணாநிதி தவறு செய்து விட்டார் என ஸ்டாலின் மன்னிப்பு கேட்டால் நானே அறிவாலயம் வந்து அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்ல தயாராக இருக்கிறேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.திமுக காங்கிரஸ் கூட்டணி இலங்கையை செய்த குளறுபடிகளை பாஜக அரசு சரி செய்து கொண்டிருக்கிறது என்பதனை மக்கள் உணர்வார்கள் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். பிரதமர் மோடி நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பிரதமர் இருக்கிற மேடையில் ஒரு மாநில முதலமைச்சர் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு அன்று ஸ்டாலின் நடந்து கொண்டது ஒரு சான்று என கூறியதுடன், ஸ்டாலினின் பேச்சை எண்ணி வெட்கப்படுகிறேன் என்றோம் விமர்சித்தார்.
முதலமைச்சர் பதவிக்கான கண்ணியத்தை அவர் காப்பாற்றவில்லை என்றும் அண்ணாமலை முதல்வரை கடுமையாக சாடினார். இந்நிலையில் திமுக அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அண்ணாமலையை விமர்சித்து பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் மீண்டும் திமுக காங்கிரஸ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- பிரதமரின் இருந்த மேடையில் கோரிக்கைகளை முன்வைப்பது தவறில்லை, ஆனால் அது சரியானதா? அதில் லாஜிக் இருக்கிறதா? பிரதமரை மேடையில் வைத்து கணக்குப்பிள்ளை போல ஸ்டாலின் கணக்கு கேட்பது சரிதானா? முதலமைச்சருடன் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எந்த இடத்திலும் முதலமைச்சரை நாங்கள் விட்டுக் தந்ததில்லை. அந்தப் பதவிக்கான கண்ணியத்தை மரியாதையை அவர் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
பிரதமர் இருந்த மேடையில் பிரதமர் தமிழகத்திற்கு அள்ளி அள்ளி தரும் ஆக்கபூர்வமான நிலையில் முதலமைச்சர் இப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது, ஆனால் அங்கு பிரதமர் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார். ஜிஎஸ்டி கவுன்சிலில் தலையிடுவதற்கு நிர்மலா சீதாராமனுக்கு அதிகாரம் இல்லை, இதை திமுகவுக்கு தெரிந்திருந்தும் அதை ஸ்டாலின் மறைப்பது ஏன். மத்திய மின்சார வாரியத்திடம் மின்சாரம் வாங்கியதற்கான பணத்தையே திமுக அரசு இன்னும் தரவில்லை. எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் அரசியல் செய்தால் அது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். பிரதமரை வரவேற்று அவரை அனுப்பி வைக்க வேண்டியது முதலமைச்சரின் கடமை, ஆனால் இந்த விவகாரத்தில் பிரதமர் கபடி ஆடுகிறார். பிரதமரை பகைத்துக்கொள்ள முதலமைச்சருக்கு மனம் இல்லை, ஆனால் மேடை கிடைத்தால் சாக்குப்போக்கு பேசுகிறார். தினசரி காலையிலும் இரவிலும் அறிவாலயம் சென்று ஸ்டாலினுக்கு பூஜை செய்வதையே கூட்டணிக் கட்சிகள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அந்த தகுதி இருந்தால் தான் கூட்டணி கட்சியாகவே இருக்க முடியும், பிரதமர் இருந்த மேடையில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை வைக்கிறார். எந்த தைரியத்தில் இப்படி கச்சத்தீவை மீட்டு தர வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை வைக்கிறார்? நான் ஒன்று சொல்கிறேன் கச்சத்தீவை தாரை வார்த்தது நாங்கள்தான் என அப்பா செய்தது தவறு என்று ஸ்டாலின் மன்னிப்பு கேட்டால், தானே அறிவாலையம் வந்து அவரை டெல்லிக்கு அழைத்துச் சென்று கச்சத்தீவை மீட்பதற்கான வேலைகளை செய்வோம் என அண்ணாமலை ஆவேசமாக கூறினார். திமுக காங்கிரஸ் இலங்கையில் செய்த குளறுபடிகளை பாஜக அரசு சரி செய்து வருகிறது அதை மக்கள் உணர்ந்து கொள்வார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.