கடந்த ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட 65 லட்சம் விலையில்லா புத்தக பைகளில் உள்ள முன்னாள் அதிமுக முதலமைச்சர்களின் புகைப்படங்களை 13 கோடி ரூபாய் செலவில் மாற்றலாம் என ஆலோசனை கூறிய போது அவர்களது புகைப்படங்களே இருந்துவிட்டு போகட்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருதன்மையுடன் கூறியதாக தெரிவித்தார்.
அதிமுக முதல்வர்களின் புகைப்படமே இருக்கட்டும் என பெருந்தன்மையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விட்டுவிட்டார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சபாநாயகர் தாளாளர் ஆக செயல்படுகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை ஆசிரியராக இருந்து வழி நடத்துகிறார். இந்த அவையில் இருப்பது எனக்கு பெருமை. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நியாயத்திற்கு மட்டும் கோபப்படும் ஆங்கிரி பேர்ட் என்றுதான் நாங்கள் அழைத்து வருகிறோம்.

பள்ளிக் கல்வித் துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணம் ரூ.32,599.54 கோடி. இவை மக்களின் வரிப்பணம். எனவே, அதை மாணவர்களுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.கிராமப்புற மாணவர்களால் ஆங்கிலம் சரியாக பேச முடியவில்லை. 8, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அவர்கள் வகுப்பிற்குரிய ஆங்கிலம் கூட சரியாக பேசமுடியவில்லை. எனவே, பள்ளி முடிந்த பிறகு 6, 7, 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு அரை மணி நேர வகுப்பும், 9, 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு தனியாகவும் அரை மணி நேர ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் நடத்த முடிவு செய்து அது தொடர்பாக பரிசீலித்து வருவதாக குறிப்பிட்டார்.

மேலும், கடந்த ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட 65 லட்சம் விலையில்லா புத்தக பைகளில் உள்ள முன்னாள் அதிமுக முதலமைச்சர்களின் புகைப்படங்களை 13 கோடி ரூபாய் செலவில் மாற்றலாம் என ஆலோசனை கூறிய போது அவர்களது புகைப்படங்களே இருந்துவிட்டு போகட்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருதன்மையுடன் கூறியதாக தெரிவித்தார். அதற்கு செலவழிக்கும் 13 கோடி ரூபாயில் மாணவர்களுக்கு பயனளிக்கும் வேறு திட்டங்களை செயல்படுத்தலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறிப்பிட்டார்.
