தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, தமிழக சட்டப்பேரவை தேர்தலை 2 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, தமிழக சட்டப்பேரவை தேர்தலை 2 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 

தமிழக சட்டமன்றத்தின் பதவிக் காலம் வரும் மே 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் வந்த இந்தியத் தேர்தல் ஆணைய தலைமை செயலர் உமேஷ் சின்ஹா அடங்கிய குழு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் பற்றி ஆலோசனை மேற்கொண்டது.

அதிமுக, திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த கோரிக்கை விடுத்துள்ளன. இதேபோல மே மாதம் கடும் வெயிலாக இருக்கும் என்பதால் முன் கூட்டியே தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திடம் அதிமுக கோரிக்கை வைத்தது. ஆனால், கூடுதல் வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டி இருப்பதால் தமிழகத்தில் முன் கூட்டியே தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில், தமிழகத்துடன் புதுவை, அசாம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றங்களுக்கான பதவிக்காலம் முடிவடைவதால் தேர்தலுக்கான இறுதிப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பள்ளிகள் இயங்கும் நாட்கள், பண்டிகை நாட்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்தல் தேதி முடிவு செய்யப்பட இருக்கிறது. குறிப்பாக கொரோனா அச்சுறுத்தல், உருமாறிய கொரோனா ஆகியவை காரணமாக தமிழகத்தில் முதல்முறையாக 2 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இது உறுதிப்படுத்த படாத தகவலாகவே உள்ளது.