காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது இடதுசாரிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி வழக்கமாகப் போட்டியிடும் உ.பி.யில் உள்ள அமேதி தொகுதியில் களமிறங்கி உள்ளார். அதே நேரத்தில் தற்போது கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் அவர் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அமேதியில் போட்டி கடுமையாக இருக்கும் என்பதால், அவர் தென்னிந்தியாவுக்கு வந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தோல்வி பயம் காரணமாக ராகுல் தென்னிந்தியாவில் போட்டியிடுவதாக பாஜக கிண்டல் செய்துவருகிறது.

இந்நிலையில் ராகுல் வயநாட்டில் களமிறங்க உள்ளது இடதுசாரிகளுக்குக் கோபத்தைத் தூண்டியுள்ளது. ஏற்கனவே மேற்கு வங்காளத்தில் தன் பிடியை இழந்துவிட்ட இடதுசாரிகள், இந்த முறை கேரளாவை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கிறார்கள். மேலும் ஐயப்பன் கோயில் விவகாரத்தை வைத்து பாஜகவும் கேரளாவில் காலூன்ற தீவிரமாக முயற்சி செய்துவருகிறது. கேரளாவில் காங்கிரஸும் இடதுசாரிகளும்தான் பிரதான கட்சிகள் என்றாலும், பாஜகவை முறியடிக்கும் வேலையில் இடதுசாரிகள் மும்மரம் காட்டிவருகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் ராகுல் போட்டியால் கேரளாவில் வெற்றி பெறுவது கேள்விக்குறியாகிவிடுமோ என்ற அச்சத்தில் இடதுசாரிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

