தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் பாடம் கத்துக்கணும் !! மோடி அறிவுரை !! ஏன் அப்படி சொன்னார் தெரியுமா ?
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினரைப் பார்த்து மற்ற கட்சிகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
மாநிலங்களவைக்கு இது 250வது கூட்டம் என்பதால் பிரதமர் மோடி மாநிலங்களவையில் பங்கேற்றுப் பேசினார். அப்போது மாநிலங்களவையில் நிறைய, பயனுள்ள விவாதங்கள் நடைபெற வேண்டும். இது சோதனைகள் செய்து, சமநிலையை ஏற்படுத்தும் இடம். இது நமது ஜனநாயகத்துக்கு முற்றிலும் அவசியமானது.
அதே நேரத்தில் சோதிப்பதற்கும், தடை ஏற்படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. மாநிலங்களவை 2வது அவையாக இருக்கலாம். ஆனால் இதை யாரும் இரண்டாம்தர அவையாக நினைக்க கூடாது.
நாட்டின் முன்னேற்றத்துக்கு ஆதரவளிக்கும் அவையாக மாநிலங்களவை இருக்க வேண்டும் என வாஜ்பாய் கூறியதை இன்று நான் நினைவுபடுத்துகிறேன். அவையில் இடையூறுகள் ஏற்படக் கூடாது என தெரிவித்தார்.
நான் 2 கட்சிகளை பாராட்ட விரும்புகிறேன். நாடாளுமன்ற விதிமுறைகளை சரியாக பின்பற்றும் கட்சிகள் தேசியவாத காங்கிரசும், பிஜூ ஜனதா தளமும்தான். இந்த கட்சி எம்.பிக்கள் ஒரு போதும் அவையின் மையப் பகுதிக்கு சென்றதில்லை.
ஆனாலும், அவர்கள் தங்களின் கருத்துக்களை வலுவாக தெரிவித்துள்ளனர். இவர்களின் நடைமுறைகளில் இருந்து நாம் அதிகம் கற்க வேண்டும்.
மாநிலங்களின் நலனுக்காக நாம் பணியாற்ற நமது அரசியல்சாசனம் ஊக்குவிக்கிறது. கூட்டாட்சி ஒத்துழைப்பு உணர்வுடன் மாநிலங்களவை நம்மை செயல்பட வைக்கிறது என தேசியவாத காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சி உறுப்பினர்களை பிரதமர் சரமாரியாக பாராட்டித் தள்ளினார்..